Tuesday 15 May 2018

குட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்?


 

கூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.

அதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன?’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.
எத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலற் ஆகிவிடுகின்றார்.

கதைசொல்லி ஆறு வயதாக இருக்கும்போது, இரையை சப்பிப் சாப்பிடாமல் முழுதாக விழுங்கும் பாம்பு (boa constrictor) ஒன்றின் படத்தைக் காண்கின்றான். அதன்பின்னர் அப்பிடியானதொரு படத்தை அவனும் வரைகின்றான். அது ஒரு மலைப்பாம்பு, யானையை விழுங்கிவிட்ட ஓவியம். அதை வயது வந்தவர்களுக்குக் காண்பிக்கின்றான். அவர்கள் அதனைத் தொப்பி என்கின்றார்கள். பின்னர் அவன் தான் கீறிய படத்திற்குள் ஒரு யானையை வரைந்தபோது அவர்கள் அவனது படத்தைப் புரிந்து கொள்கின்றார்கள். கூடவே அவனுக்கு ஒரு ஆலோசனையும் சொல்கின்றார்கள். உந்தப் படம் கீறும் வேலையை ஒருபுறம் போட்டுவிட்டு - வர         லாறு, பூமிசாஸ்திரம், கணிதம், இல்க்கணம் போன்றவற்றைப் படிக்கும்படி சொல்கின்றார்கள். அதன்பின்னர் அவன் தனது ஓவியனாக வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகின்றான். வயது வந்தவர்கள் பொதுவாக, எதையும் தங்கள்பாட்டில் புரிந்துகொள்வதில்லை என்றும் – சலிப்பின்றி எப்போதும் சிறுவர்களுக்கு தமது கருத்துகளைத் திணித்துவிடுகின்றார்கள் என்றும் சொல்கின்றார் கதைசொல்லி.

எனது மகன் காட்டிய ஓவியம் அதுதான். யானையை விழுங்கிவிட்ட மலைப்பாம்பின் ஓவியம்.
Antoine de_Saint Exupery பிரான்ஸ் தேசத்தில் 1900 ஆம் ஆண்டில் பிறந்தவர். இரண்டாம் உலகமகாயுத்தத்தின் போது இராணுவ உளவு விமானியாகப் பணியாற்றியவர். 1940களில் ஜேர்மனியர்கள் பிரான்சிற்குள் புகுந்தபோது அமெரிக்காவிற்கு தப்பியோடினார். 1943களில் வடக்கு ஆபிரிக்காவில் மீண்டும் விமானப்படையில் இணைந்தார். 1944 ஆம் ஆண்டு மத்தியதரைக்கடல் மேலாக உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெர்மனிய விமானப்படையினரால் அவரது விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு இறந்தார். ‘Southern Mail’, ‘Night Flight’, ‘Wind, Sand and Stars’ என்பவை இவர் எழுதிய ஏனைய புத்தகங்கள்.

‘The Little Prince’ அமெரிக்காவில் இருந்தபோது இவர் எழுதிய நாவல் ஆகும். சிறிய கோள் ஒன்றிலே தனித்து வாழ்ந்த சிறுவனைப் பற்றிய கதை இது. ஒருதடவை ஆபிரிக்காவில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இவரது விமானம் சகாராப்பாலைவனத்தில் விபத்திற்குள்ளாகியது. இவரும் சக விமானியும் அதில் தப்பிப் பிழைத்தார்கள். அந்தச் சம்பவமே ‘குட்டி இளவரசன்’ எழுதுவதற்கு காரணமாகியது.

நாவலின் பெயரும் – அந்தப்புத்தகத்திற்கான ஓவியங்களும் – குட்டி இளவரசன் ஒரு சிறுவர் இலக்கியமே என அடித்துச் சொல்கின்றன. அப்படியாயின் எப்படி இது வயது வந்தோர்க்கான இலக்கியம் ஆகும்? புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போதே, ‘குட்டி இளவரசன்’ வயது வந்தோர்க்கான சிறுவர் இலக்கியம் என்பது தெரிந்து விடுகின்றது. எல்லா வயது முதிர்ந்தோரும் ஒருகாலத்தில் சிறுவர்களாகத்தானே இருந்திருக்கின்றோம். அப்படியென்றால் எப்படி ஒரு சிலரால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது?

பிரெஞ்சு மொழியில் (அந்துவான் து செந்த் எக்சுபெரி) வெளிவந்த இந்தப்புத்தகம் இதுவரை 180 ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலே அதிகமாக அச்சேறிய பைபிள், மார்க்கிரட் மிக்சல் எழுதிய Gone With The Wind இற்கு அடுத்தபடியாக உள்ள நூல் குட்டி இளவரசன். தமிழில் வெ.ஸ்ரீராம் + மதனகல்யாணி மற்றும் யூமா வாசுகி என்போரால் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இதன் ஆங்கில வடிவத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கிப் படித்துக் கொள்ளலாம்.

ஒருதடவை மனித சஞ்சாரமற்ற சகாராப் பாலைவனத்தில், கதைசொல்லி தன்னந்தனியாகப் பறந்து கொண்டிருக்கும்போது விமானம் பழுதடைந்து விபத்திற்குள்ளாகின்றது. ஒருவாரத்திற்குப் போதுமான தண்ணீர் கையிருப்பில் இருந்தது. இரவு. மணலில் படுத்துறங்குகின்றார். அதிகாலை சூரிய உதயத்தின்போது ஒரு குரல்,
”உங்களால் முடியுமானால் ஒரு ஆட்டின் படம் கீறித் தரமுடியுமா?”

யாருமற்ற வனாந்தரத்தில் குட்டி இளவரசன் அறிமுகமாகின்றான். கதை தொடங்குகின்றது. குட்டி இளவரசனுக்கு விமானம் புதுமையாக இருக்கின்றது. தனது இருப்பிடத்தில் எல்லாம் சின்னதாக இருப்பதாகச் சொல்கின்றான். ஒரு பூ, மூன்று எரிமலைகள் மாத்திரமே அவனது உலகில் இருக்கின்றன. அவனே அந்த உலகத்தைச் சுத்திகரிக்கின்றான். அவனே பூவிற்கு நீர் ஊற்றுகின்றான். ஒவ்வொருநாளும் குட்டி இளவரசனின் உலகம் பற்றி புதிது புதிதாக அறிகின்றார் கதைசொல்லி. ஒருநாளில் 44 தடவைகள் சூரிய அஸ்தமனம் நிகழ்வதாகவும், தனது உலகில் புலிகள் இல்லை எனவும் கூறுகின்றான். தனது உலகிற்கு ரோசாச்செடி வந்தது எப்படி என்பது பற்றியும், தான் அந்த உலகத்தை விட்டுப் பிரிந்தது பற்றியும் கதை கதையாகச் சொல்கின்றான்.

ஒவ்வொரு உலகத்திற்கு பயணம் செல்லும்போதும், குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் புதிர்த்தன்மை வாய்ந்ததாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன. அரசன், தற்பெருமை கொண்ட மனிதன், மது அருந்துபவன், வியாபாரி, விளக்கேற்றுபவன், பூகோளசாஸ்திரி என ஒவ்வொரு கிரகத்திலும் அவன் சந்திப்பவர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. அவனது சிந்தனைகள் வளர்ந்தோரைக் காட்டிலும் வேறுபட்டவை. அவர்களது பதிலில் திருப்தியுறாத குட்டி இளவரசன், தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, ஒவ்வோர் உலகாகச் செல்கின்றான். எந்த உலகை நான் தரிசிப்பது நல்லது என பூகோளசாஸ்திரியிடம் ஆலோசனை கேட்கின்றான்.

அதன்பின்னர் பூகோளசாஸ்திரியின் ஆலோசனைப்படி பூமிக்கு வருகின்றான். அவன் வந்து சேர்ந்த இடம் ஆபிரிக்கா. பாம்பு, மலர், நரியென்று ஒவ்வொன்றாகச் சந்திக்கின்றான். கண்களால் பார்க்க முடியாததை இதயத்தால் பார்க்க முடியும் என்கின்றது நரி. ஓர் அரசனின் விரலைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவன் தான் என்கின்றது பாம்பு. அதன் பின்னர் விமான ஓட்டியான கதைசொல்லியைச் சந்திக்கின்றான். நட்புக் கொள்கின்றான். பாலைவனத்தின் தனிமையை குட்டி இளவரசனுடன் போக்கிக் கொள்கின்றான் கதைசொல்லி. வானில் தோன்றும் நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல, அவை சிரிக்கின்றன, அதை உணருங்கள் என்று கற்றுத் தந்துவிட்டு பிரிந்துவிடுகின்றான் குட்டி இளவரசன்.

எப்பொழுதாவது ஆபிரிக்கா பாலைவனத்திற்கு பிரயாணம் செய்ய நேரிட்டால், அவனை நீங்கள் சந்திக்கக்கூடும் என்ற ஏக்கத்துடன் நாவல் முடிவடைகின்றது.

நாவலை வாசிக்க வாசிக்க விரிந்து செல்கின்றது உலகம். குட்டி இளவரசன் ஒவ்வொரு உலகத்திலும் சந்திக்கும் அவர்கள், நாம் தினமும் காணும் மனிதர்களா? பூடகமாக அப்படித்தான் சொல்கின்றார்.

இந்த நாவலையும், அந்துவான் து செந்த் எக்சுபெரியையும் கெளரவிக்கும் முகமாக பிரெஞ் தேசம் தமது ஐம்பது பிராங் நோட்டில் - குட்டி இளவரசன், மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு போன்ற படங்களை வெளியிட்டுள்ளது.

இந்த நாவலை மையமாக வைத்துக் காலத்துக்குக் காலம் பல திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித்தொடர்கள் வந்துள்ளன.

சிறுவர் இலக்கியங்கள் பொதுவாக வளர்ந்தவர்களால் தான் எழுதப்படுகின்றன. சிறுவர்கள் வாசிப்பதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்கும் என இவை எழுதப்படுகின்றன. அதன் மூலம் சிறுவர்கள் இவற்றைக் கிரகித்துக் கொண்டு தமது மனவளத்தைப் பெருக்கிக் கொள்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறுவர் இலக்கியங்களே அருகிவிட்டன. வளர்ந்தோருக்கான ‘சிறுவர் இலக்கியம்’ பற்றிச் சொல்லத் தேவையில்லை.

நன்றி : ஞானம் (மே 2018)




No comments:

Post a Comment