Sunday 24 December 2017

பன்முகம் - நூல் வெளியீட்டு விழா

  
     காலம் :  07 - 01 - 2018 ஞாயிற்றுக்கிழமை 
       நேரம்  :  பிற்பகல் 3 மணி - பிற்பகல் 5 மணி
       இடம்   :  பீக்கொக் மண்டபம் [ ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம் ]
                      Peacock Room, Sri Shiva Vishnu Temple 
                      52 Boundary Road, Carrum Downs, VIC 3201


      ஸ்ரீமதி பாலம் லக்ஷ்மண ஐயர் அவர்களது தலைமையில்
நடைபெறும் " பன்முகம் " நூல் வெளியீட்டு விழாவில் உங்கள்
        அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் 
                     அன்புடன் அழைக்கின்றோம். 


       " அழகு தமிழ் பேசி ஆனந்தம் அடைந்திடுவோம் "

            வாழ்க தமிழ் மொழி ! வாழ்க வளமுடன் !



                                தொடர்புகளுக்கு :  0431 200 870 

Friday 22 December 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 19-  கலாச்சாரம்

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி விட்டன.

சுப்பர்மாக்கற்றிற்குச் சென்ற புங், நீண்ட நாட்களின் பின்னர் ஆலினையும் அவளது பெற்றோரையும் சந்த்தித்தாள். ஆலின் ஒருதடவை தொழிற்சாலையில் உள்ள எல்லாரையும் பார்க்க விரும்புவதாகவும், தனது வீட்டிற்கு வரும்படியும் சொல்லியிருந்தாள்.

ஆலினை தாயாருடன் காசு எடுப்பதற்காக வங்கிக்கு அனுப்பிவிட்டு, அவளின் தகப்பனார் புங்கிடம் இரகசியம் பேசினார்.

“ஆலினின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் மூன்று மாதங்கள்தான் அவள் உயிருடன் இருப்பாள்என்றார் அவர்.

Friday 15 December 2017

கார் காலம் - நாவல்

அதிகாரம் 18 - பெரிய விருந்து
தொழிற்சாலையை மூடுவதென்று தீர்மானம் செய்த பின்னர் முன்னைவிட அதன்  உற்பத்தியில், தரத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பில் பலமடங்கு கவனம் எடுத்தார்கள். பாதுகாப்பு (safety), செலவு (cost reduction), தரம் (quality) என்பவற்றிற்காக பல இலட்சம் பணம் ஒதுக்கினார்கள். தொழிற்சாலையின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேலை நடந்த காலத்தில் இருந்த அக்கறையைக் காட்டிலும் பலமடங்கு அக்கறை காட்டினார்கள். எல்லாவற்றிலும் ‘தடிஓட்டிக்கொண்டு திரிந்தார்கள்.

இந்தத் தொழிற்சாலை அவுஸ்திரேலியாவில் மட்டும்தான் மூடப்படுகின்றது. உலகம் பூராவும் இதே போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. இப்பொழுதும் கார் உற்பத்தியில் முதலாவது இடம்---நம்பர் வண்---என்று பெயர் எடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்தும் தமது ‘பெயரைக்காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

Friday 8 December 2017

'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்டம்


ஒரு நேர்காணல் என்பது பசுவிடம் பால் கறப்பதைப் போன்றது. பசுவிடம் நேரிடையாக ஒருவன் பால் கறக்கும்போது, அது சிலவேளைகளில் பாலை ஒழித்துவிடும். இயந்திரம் மூலம் பால் கறக்கும்போது இசகுபிசகாக சில வேளைகளில் இரத்தமும் வந்துவிடும். பசுவிற்கு கன்றைக் காட்டி, அதையும் இடைக்கிடை பால் குடிக்க வைத்து, பால் கறக்கும் வித்தை அற்புதமானது. அந்தத் தந்திரமான நேர்காணல்களை இப்புத்தகத்தில் காண முடிகின்றது. ஒருவரிடம் உள்ள ‘அத்தனையையும்’ கறந்துவிடல் வேண்டும். இன்னொருவர்  வந்து மீண்டும் கறப்பதற்கு அங்கு இடம் வைத்தல் ஆகாது.

நாசூக்கான கேள்விகள், அச்சொட்டான பதில்கள்.

அதைத்தான் கருணாகரனின் இந்த ‘புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது’ நேர்காணல் புத்தகமும் செய்திருக்கின்றது. தொகுப்பில் வரும் புகைப்படக்காரர் மட்டுமல்ல அனைவருமே பொய் சொல்லவில்லை.

Friday 1 December 2017

கார் காலம் - நாவல்

 அதிகாரம் 17 - மூடுவிழா

கார் காலம் ஆரம்பமாகிவிட்டது. மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து மொட்டையாகின. தெருக்கள் எங்கும் சருகுகள் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டன. வானம் எப்பொழுதும் இருண்டபடி முகில் கூட்டங்களால் சூழப்பட்டிருந்தது. அடிக்கடி மழை வேறு பொழிந்தது.

ஹெவினின் மனைவி இருதய வால்வு ஒப்பரேஷன் செய்து வைத்தியசாலையில் இருந்தாள். இது அவளிற்கு இரண்டாவது ஒப்பரேஷன். அந்த நாட்களில் வேலை இழந்ததும் மனைவியின் சுகவீனமுமாகச் சேர்ந்து ஹெவினின் மன்நிலையை இறுக்கமடையச் செய்தது. சிலநாட்கள் கழித்து ஆலினை பிறைய்ரன் என்னும் இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்திருந்தார். ஹெவினுக்கு நான்கு இலட்சங்கள் வழங்கிய நிர்வாகம் ஆலினுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. ஒழுங்காக வேலைக்கு வராமை, தொழிற்சாலை லீஸ் காரை பலமுறை விபத்துக்குள்ளாக்கியமை போன்ற பல்வேறு காரணங்களை இதற்கு முன்வைத்திருந்தது நிர்வாகம்.

Wednesday 22 November 2017

கார் காலம் - நாவல்



அதிகாரம் 16 - களை எடுத்தல்

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கைகளால்தான் பெயின்றை ஸ்பிறே செய்தார்கள். மெதுவாக அந்த இடத்தை ரோபோக்கள் பிடித்துக் கொண்டன. இன்று பிறரைமரில் 6 ரோபோக்களும், ரொப் கோற்றில் 12 ரோக்களும் வந்துவிட்டன. ரோபோக்கள் வந்ததன் பின்னர் ஆட்களுக்கு வேலை இல்லாமல் போயின. வேலையும் சுத்தமாக அழகாக இருந்தது.

2013 ஆம் ஆண்டு தொழிற்சாலை நிர்வாகம், வேலை செய்பவர்களில் 300 பேர் வரை கட்டாய பணி நீக்கம்  செய்ய இருந்தது. கடைநிலை ஊழியர்களில் இருந்து மனேஜர் வரை இதில் உள்ளடங்குவதாக அது இருந்தது.  யார் தலை எப்போது உருளும் என்று எல்லோரும் பயந்தபடி இருந்தார்கள். தினமும் வேலை செய்யுமிடத்தில் இதைப்பற்றிய பேச்சுத்தான் முக்கிய இடம் பிடித்தது. ஸ்மோக்கோ நேரத்திலும் (smoko Time – தேநீர், புகை பிடிக்கும் இடைவேளை) இதைப்பற்றித்தான் கதையாக இருந்தது.

Wednesday 15 November 2017

’அம்பரய’ – நூல் அறிமுகம்


 




போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை

’அம்பரய’ என்றால் என்ன?

நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்குகையில், என்னுடன் வேலை செய்யும் சக சிங்கள நண்பர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. ஒருவேளை சொல் மயக்கம் அல்லது உச்சரிப்பு காரணமாக அவர்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம்.

’இலங்கையைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளரான உசுல. பி. விஜய சூரிய ஆங்கிலத்திலேயே அதிகமும் எழுதியவர். அம்பரய 1970 களில் இலங்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தவிர அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இந்தப் புத்தகத்தில் இல்லை.

அதே போல ஆங்கில வழி மூலம் தமிழிற்குக் கொண்டு வந்தவர் தேவா. தேவா சுவிஸ் நாடைச் சேர்ந்தவர் என்பதைத்தவிர அவர் பற்றிய தகவலும் தெரியவில்லை. இவரது மொழிபெயர்ப்பில் ஏற்கனவே ’சைனா கெய்ரெற்சி’ எழுதிய ‘குழந்தைப் போராளி’ சுயசரிதையை வாசித்திருக்கின்றேன்.

Friday 10 November 2017

கார் காலம் - நாவல்



அதிகாரம் 15 - காசிருந்தால் வாங்கலாம்

2009 ஆம் ஆண்டு இலங்கையில் – முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தின் பின்னர் மிகவும் மனம் உடைந்து போனான் நந்தன். ஒரு வாரமாக அவன் வேலைக்கு வரவில்லை. அதன் பின்னரும் சிலமாதங்கள் அவனால் வேலையில் ஒன்றிக் கவனம் செலுத்த முடியவில்லை. மெல்பேர்ண், சிட்னி, கன்பராவில் நடந்த ஊர்வலங்கள், உண்ணாவிரதப் போராட்டங்களில் எல்லாம் அவனும் முன்னர் பங்குபற்றியிருந்தான்.

பாம் விவாகரத்துச் செய்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் வந்த கிறிஸ்மஸ் விடுமுறையில் வியட்நாம் சென்றிருந்த பாம், திரும்பி வரும்போது தன்னில் பாதி வயது கொண்ட அழகிய யுவதி ஒருத்தியை மணம் முடித்துவிட்டு வந்தான்.

வெளிநாட்டு மாப்பிள்ளை. அவளும் ஓமென்று உடன்பட்டுவிட்டாள்.

Tuesday 7 November 2017

மாபெரும் இலக்கியச் சந்திப்பு - கங்காருப் பாய்ச்சல் (26)



இடம் : வேர்மொன்ற் சவுத், மெல்பேர்ண்

காலம் : எங்கள் புத்தகங்கள் வெளிவந்தவுடன்

மங்கல விளக்கேற்றல் : அ, ஆ, இ, திருமதி அ

அமர்வு 1 – வாசிப்பு அனுபவப் பகிர்வு
தலைமை ஆ

பத்திரிகையாளர் ’அ’ எழுதிய ‘மழை’ சிறுகதைத்தொகுப்பை இ புகழ்ந்துரைப்பார். இதன் அணிந்துரையை திரு. ஆ எழுதியுள்ளார்.

திரு ஆ எழுதிய ‘பலாக்கொட்டை’ அறிவியல் கட்டுரைத் தொகுப்பை பத்திரிகையாளர் ‘அ’ முதுகு சொறிவார்.

வைத்தியர் ‘இ’ எழுதிய ‘ஆதாமும் ஏவாளும்’ சிறுகதைத் தொகுப்பை பொறியியலாளர் ‘ஈ’ என்று பல்லிளிப்பார்.

Wednesday 1 November 2017

கார் காலம் - நாவல்


14. அவனேதான் இவனே! இவனேதான் அவனே!!

ஆலின் இப்போது தினமும் மனவள நிலையத்திற்கு சிகிச்சைக்காகப் போய் வருகின்றாள். அதன் பிற்பாடு அவளது நடவடிக்கைகளில் சிறிது மாறுதல்கள் தென்பட்டன. உடல் சோர்வு, பலகீனம், டிப்ரஷன் என்பவற்றிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாள்.

"நான் ஓவர் டைம் செய்து விட்டு, லேட்டாக வீட்டுக்குப் போனால் பாட்னருக்கு கோபம் வருகிறது. என்னையே நெடுகலும் பார்த்துக் கொண்டு இருக்க வேணும் போல கிடக்கு என்கின்றார். இப்படியும் ஆக்கள் இருக்கின்றார்களா?" ஒருநாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது திடீரென நந்தனிடம் இப்படிக் கேட்டாள் ஆலின்.

"யார் இந்தப் பாட்னர்? உவள் புதுக்கவொரு பாட்னரைப் பிடிச்சிட்டாள் போல" ஆச்சரியப்பட்டான் நந்தன்.

Thursday 26 October 2017

கார் காலம் - நாவல்

கார் காலம் - தொடர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.


இது பற்றிய திரு குரு அரவிந்தன் அவர்களின் கருத்தை இங்கே தருகின்றேன்.



இது 29.09.2017 கனடா உதயன் பத்திரிகையில் வெளியானது.

உங்கள் கருத்துகளையும் அறியத்தந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.



கார்காலம் தொடர்கதை பற்றிய கண்ணோட்டம்

(குரு அரவிந்தன்)

கே.எஸ்.சுதாகரின் கார்காலம் என்ற தொடர்கதை உதயன் பத்திரிகையில் வெளிவந்த போது பலராலும் பாராட்டப்பட்ட தொடராக இருந்தது. இலக்கியத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, இந்தத் தொடரைப்பற்றி வாசகர்களின் கருத்து என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள சிலருடன் உரையாட நேர்ந்தது. ‘உதயன் பத்திரிகை வாசிப்பீர்களா?’ என்று நூல் வெளியீட்டுக்கு வந்த மொன்றியல் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘என்ன பயணக்கட்டுரை பற்றியா கேட்கிறீர்கள்?’ என்றார். ‘இல்லை கார்காலம் பற்றி’ என்றேன். ‘நல்லகதை, கெதியாக முடித்துவிட்டார்கள்’ என்றார். ‘தொடர்ந்து வாசிக்க முடியவில்லை, ஆனாலும் வாசித்த பகுதிகள் சிறப்பாக வாசகர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது’ என்று நண்பர் அகணி அவர்களைக் கேட்டபோது குறிப்பிட்டிருந்தார். நண்பர் அகணியும் ஏற்கனவே தொடர் நாவல் ஒன்று எழுதியிருந்தார். ‘பத்தொன்பது வாரங்களாக இரசித்து வாசித்தேன், அவுஸ்ரேலிய வாழ்க்கை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது’ என்றார் பீல் பிரதேசத்தில் வசிக்கும் மங்கை என்ற இலக்கிய ஆர்வலர். ‘ஏன் இவ்வளவு விரைவாகக் கதையை முடித்து விட்டார்’ என்று இன்னுமொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். கதாசிரியரிடம் பதிலை எதிர்பார்க்காவிட்டாலும், எனது அனுபவம் என்வென்றால், ‘எந்தத் தொடரை அலுப்பில்லாமல் வாசிக்கிறோமோ அது விரைவாக முடிந்து விட்டது போலத்தான் தெரியும். நல்ல திரைப்படங்களும் அப்படித்தான்.’

Wednesday 18 October 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 13 - மாயா

ஆலின் தினமும் எழுதும் கொப்பியை டைரியை – யாரோ திருடி விட்டார்கள். ஹெவினும் அவளுமாக தொழிற்சாலைக் குப்பைக் கூடைகளைக் கிழறினார்கள். அவளது மூன்று வருடத் தேட்டம் தொலைந்து போயிற்று. அதை எடுத்த கடன்காரனை தனக்குத் தெரியுமென்று அன்று முழுவதும் திட்டியபடி இருந்தாள்.

அந்த டயரி – எத்தனை மனிதர்கள் அவளைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்கள் என்பதைக் கூறும்.
கிழவர் வலது புறமாகவும் ஆலின் இடது புறமாகவும் குப்பையை நோண்டினார்கள். கிழவருக்கு இருபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நடந்த விபத்தால் அங்கவீனமானவர். ஆலின் சமீபமாகத்தான் நொண்டுகின்றாள். சிலவேளைகளில் கழுத்து நோவும் அதனுடன் சேர்ந்து விடும். அழுது கொண்டே 'மெடிக்கல் சென்ரர்' போவாள். அங்கு அரை மணித்தியாலம் றிலக்ஸ் பண்ணிவிட்டு வரும் போது சிரித்தபடி வருவாள்.

Friday 13 October 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 12 - டயரிக் குறிப்புகள்

ஆலினை இப்பொழுது பலரும் கூறு போடத் தொடங்கிவிட்டார்கள்.

நந்தனுக்கு அவள் மீதிருந்த பிடிமானம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது.

அப்பொழுது ஃபுங் அங்கு வந்து சேர்ந்தாள். ரொப் கோற்றில் பெயின்ற் மணம் தனக்கு ஒத்துவரவில்லை என்பதைக் காரணம் காட்டி ‘எண்ட் ஒஃப் லைனிற்கு மாற்றம் கேட்டு வந்திருந்தாள்.

ஃபுங் தினம் ஒரு பெர்ஃவியூமுடன் வருவாள். தினம் அவள் போடும் ஹெயர் ஸ்ரைல் யாரையும் கவர்ந்திழுக்கும். ஒன்றுக்கு மூன்று வளையங்கள் காதில் தொங்கும்.

தொழிற்சாலை விதிகளின்படி ஓவரோல் ஒருவரின் மணிக்கட்டுவரை நீண்டிருக்க வேண்டும். ஆனால் புங் தன் ஓவரோலை முழங்கை வரையும் மடித்திருப்பாள். அப்படியே பாதங்கள்வரை நீண்டிருக்கவேண்டியதை இரண்டு மடிப்புகள் மடித்திருப்பாள். தொழிற்சாலைத் தொப்பியைக்கூட அணியமாட்டாள். குச்சி, நைக் போன்ற பிறாண்ட்நேம் தொப்பிகளைத்தான் அணிந்து கொள்வாள்.

அவளைப் பார்க்கும் ஒருவருக்கு நிட்சயமாக திரைப்பட நடிகை ‘ஷோபா வந்து போவாள். நந்தனுக்கும் ஷோபா கண்ணுக்குத் தெரிந்தாள்.

Wednesday 4 October 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 11 -  கிழவன் நடனம்

ஆலினும் நந்தனும் இப்பொழுது எண்ட் ஒஃப் லைன் பகுதியில் வேலை செய்தார்கள்.

ஹெவின் குறூப் லீடர். நந்தனும் பெளசரும் ரீம் லீடர்கள்.

இவர்களுக்குக் கீழே 18 பேர்கள் வேலை செய்தார்கள்.

நந்தன் அங்கு ரீம் லீடராக வந்தபோது, அவனது வருகையைக் கொண்டாடும் முகமாக பாம் ஒரு பாட்டுப் பாடினான். அந்தப்பாடலில் புங்கை நந்தனுடன் இணைத்து தனது வியட்நாம் மொழியில் பாடியிருந்தான். வியட்நாம் மொழி தெரிந்தவர்களுக்குத்தான் அதன் பூரண அர்த்தம் தெரியும். நந்தனுக்கும் ஓரளவு தெரிந்தது. தெரியத்தானே வேண்டும்.

விதி மக்காறியோவின் வடிவில் நந்தனின் திசையை மாற்றியது. அவன் இப்போது புங்கின் பக்கம் சாய்ந்துவிட்டான். புங் இப்பொழுதும் ரொப் கோற்றில் வேலை செய்தாள். அவளின் பிரிவால் நந்தன் தவிப்பதாக அந்தப் பாடல் அமைந்திருந்தது.

Sunday 1 October 2017

அனுபவம் புதுமை – சிறுகதை


செம்பியன் செல்வன் சிறுகதைப்போட்டி 2016 (ஆறுதல் பரிசு, ஞானம் சஞ்சிகை)

புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான்.

துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்---long integrated population medicine (IPM)--- ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases -  சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன் கலந்துரையாடி குறிப்புகள் எடுக்க வேண்டும்.

இவர்கள் குழுவில் ஜொனதான், அன்டி நூஜ்ஜின், கான், ஜெசிக்கா, லோறா, ஜுவான் என மொத்தம் ஏழு பேர்கள் இருந்தார்கள். விரிவுரைகள் இல்லாத மாலை நேரங்களில் துவாரகனும் லோறாவும் நியூமனை சந்திப்பது வழக்கம்.

Wednesday 27 September 2017

பிறந்த நாள் எப்போது? - கதை


அவள் பெயர் லோறா. வியட்நாமியப்பெண். பல வருடங்களாக ரூபனுடன் வேலை செய்கின்றாள். ரூபனை தனது ஆத்ம நண்பன் என்று சொல்லிக் கொள்வாள். அடிக்கடி இலங்கைத் தமிழர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வாள். அங்கு வேலை செய்பவர்களில் அவளின் பிறந்த நாள் எப்போது என்பது எவருக்கும் தெரியாது.


“ஆத்ம நண்பனுக்கும் சொல்லப்படாதா?” ரூபன் கேட்பான்.


“அடுத்த வருடம் சொல்கின்றேன்” சிரித்து மழுப்புவாள்.


பிறந்தநாளைச் சொன்னால் தமது வயதை மட்டுக் கட்டிவிடுவார்கள் என அனேகம் பேர், அதுவும் பெண்கள் பயப்பிடுவதுண்டு.


எல்லாவிதமான கொண்டாட்டங்களிலும், அடுத்தவர்களது பிறந்தநாள் விழாக்களிலும் அவள் கலந்து கொள்கின்றாள். அதில் ஒன்றும் குறைவில்லை.


ரூபன் அந்த வேலையிடத்தை விட்டு விலகும் காலம் வந்தது. அன்றுமுதல் அவளிடம் உனது பிறந்தநாளைச் சொன்னால் ஒவ்வொரு வருடமும் வாழ்த்து அனுப்பி வைப்பேன் என்பான்.
அதற்கு அவள், “நாளைக்குச் சொல்கின்றேனே!” என்பாள். ஆனால் சொல்வதில்லை.


கடைசி நாள் – ரூபன் பிரியும்போது லோறாவைப் பார்த்தான்:

“எனக்கு ஏது பிறந்தநாள். நான் போரின் குழந்தை. நான் என் அப்பாவைக்கூட ஒருநாளும் பார்த்ததில்லை” சொல்லும்போது அவள் கண்கள் பனித்தன.

போர் யாரைத்தான் விட்டு வைத்தது? ரூபன் தனது மக்களை நினைத்துக் கொண்டான். அவனது கண்களிலும் அந்தக் கலக்கம்.



Wednesday 20 September 2017

அவர் எனது மாமா! – சிறுகதை

 


திருமணம் முடிந்து, வீட்டிற்கு வந்துவிட்ட மணமக்கள் கம்பளம் விரிக்கப்பட்ட செற்றியில் நடுநாயகமாக வீற்றிருந்தார்கள். மீனா ரகுபதியின் ஒரே மகள். அம்மா இறந்துவிட்டார். மீனாவிற்கும் முன்பின் அறிமுகம் இல்லாத முரளிக்கும் திருமணம் நடந்திருந்தது.

மீனாவும் முரளியும் கதைத்ததையோ சிரித்துக் கழித்ததையோ காண முடியவில்லை. மீனா மொபைல் போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். ஆக்கள் மெல்லக் கலைந்து போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அவள் எழுந்து தனது றூமுக்குள் நுழைந்தாள். முரளி ஆந்தைக்கண் முழியால் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து உள்ளே போய் கதவைச் சாத்தினான்.

சற்று நேரத்தில் உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. மீனா டெக் பக்கம் இருந்த கதவினூடாக வெளியே பாய்ந்தாள். தன் குதியுயர்ந்த செருப்புகள் இரண்டையும் கழற்றிப் புல்வெளிக்குள் எறிந்தாள். டெக்கினுள் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகுபதியும் திகைத்து விடுபடமுன் வீட்டு வாசலை நோக்கி ஓடினாள். சடுதியாக ஒரு கார் கிரீச்சிட்டு வாசலில் வந்து நின்றது. ஒரு காப்பிலி காருக்குள் இருந்து இறங்கி மீனாவின் கையைக் கோர்த்தான். இருவரும் பாய்ந்து காருக்குள் ஏறினார்கள். வாசலை நோக்கி ஓடிவந்தவர்களுக்கு, இருவரும் கையைக் காட்டியபடியே பறந்தோடினார்கள்.

“என்ன தம்பி... என்ன நடந்தது?மாப்பிள்ளை முரளியைப் பார்த்துக் கேட்டார் ரகுபதி.

“நான் ஒண்டும் செய்யேல்லை மாமா! கத்தி ஒண்டை நீட்டினபடி – கிட்ட வராதை, தொடாதை, குத்துவன் எண்டாள் மீனா. பிறகு கதவைத் திறந்து ஓடீட்டாள்திகைப்பில் இருந்து நீங்காதவனாக முரளி நின்றான்.

ரகுபதி நெஞ்சைப் பொத்தியபடி நிலத்திலே சரிந்தார். ஹார்ட் அற்றாக். அம்புலன்ஸ் வந்தது. வைத்தியசாலைக்கு விரைந்தார்கள்.

வைத்தியசாலையில் சில நாட்கள் தங்கியிருந்து ரகுபதி இருந்து சிகிச்சை பெறவேண்டும் என்றார்கள் வைத்தியர்கள். அவருடன் கூடமாட உதவிக்கு நிற்பதற்கு ஒருவர் தேவை என்றார்கள்.

முரளி ’நான் நிற்கின்றேன்’ என்றான்.


Friday 15 September 2017

அவர் எனது மாமா!


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

ரகுபதியின் ஒரே மகள் மீனா. அம்மா இறந்துவிட்டார். மீனாவிற்கும் முன்பின் அறிமுகம் இல்லாத முரளிக்கும் திருமணம் நடந்தது.

முதலிரவிற்காக ஹோட்டல் போகும் வழியில் மீனா தனது காதலனுடன் கம்பி நீட்டிவிட்டாள்.

செய்வதறியாது திகைத்தான் முரளி.

செய்தி கேட்ட ரகுபதிக்கு ஹார்ட் அற்றாக். வைத்தியசாலைக்கு விரைந்தார்கள். அவருடன் வைத்தியசாலையில் நிற்பதற்கு ஒருவர் தேவை என்றார்கள்.


முரளி ’நான் நிற்கின்றேன்’ என்றான்.

Friday 8 September 2017

வ.ந.கிரிதரன் நேர்காணல் - கண்டவர் : கே.எஸ்.சுதாகர்



 

பகுதி 2

(வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு, ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’, 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.)

9. நீங்கள் எழுதிய அறிவியல் / அமானுஷ்ய சிறுகதைகள், புகலிட வாழ்வனுபவம் சார்ந்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.

Sunday 3 September 2017

வ.ந.கிரிதரன் நேர்காணல் - கண்டவர்: கே.எஸ்.சுதாகர்


 
பகுதி 1

(வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு, ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’, 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.)

1. உங்கள் பெயரின் முதல் எழுத்துக்களான வ.ந என்பவை எதனைக் குறிக்கின்றன?

Tuesday 22 August 2017

பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்

 



கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.

தொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் சொல்கின்றன. மற்றவர்களும் இன்னும் சற்றே சிரத்தை எடுத்துக் கொள்வார்களாயின், அவர்களாலும் நல்ல கதைகளைப் படைக்க முடியும் என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகள் காட்டி நிற்கின்றன. இனி தொகுப்பில் உள்ள சிறுகதைகளைப் பார்ப்போம்.

Tuesday 15 August 2017

ரயில் ஸ்நேகம் - கங்காருப் பாய்ச்சல்கள் (25)


”மச்சான் நான் சிட்னி வந்திருக்கிறன். உன்னைப் பாக்க ஆசையாக இருக்கடா” நண்பன் தவராஜா சொல்ல, மறுமுனையில்

“எனக்கும்தானடா. ஒரு நாளைக்கு வா. சந்திப்போம்” என்றான் புவி.

25 வருடங்களுக்கு முன்னர், இருவரும் இலங்கையில் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

புவி அவுஸ்திரேலியா வந்து பத்து வருடங்கள். பெரிய வீடு வசதிகளுடன் இருக்கின்றான். தவராஜா வேலை நிமிர்த்தம் சிட்னி வந்திருந்தான்.

குறிப்பிட்ட நாளில் தனது வீட்டிற்கு அண்மையாகவுள்ள ஸ்ரேசனிற்கு வரும்படி சொன்னான் புவி.

Tuesday 8 August 2017

விளக்கேற்றுபவன் – சிறுகதை



”சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை இருக்கின்றாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார் பிடிக்கப் போயிட்டார்” அம்மா சொன்னார்.

நாங்கள் குடும்பமாக போவது என்றால் தான் அப்பா கார் பிடிப்பார். முன்னர் ஒரு தடவை ‘அன்னையும் பிதாவும்’ படம் பார்க்க அப்படிப் போயிருந்தோம்.

அமரசிங்கம் அண்ணையின் கார் வந்துவிட்டது. அப்பா சைக்கிளை காரின் மேல் போட்டுக் கொண்டுவந்தார்.

நான் காரின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். அப்பா முன் சீற்றில் இருந்தார். அமரசிங்கம் அண்ணைக்கும் சிவராசன் அண்ணையைத் தெரிந்திருந்ததால், அவரைப் பற்றிக் கதைத்துக் கொண்டு வந்தார் அப்பா.

”சிவராசன் குடிக்கிறவன் தான். ஆனால் ஒருநாளும் வேலைக்குப் போகும்போது குடிப்பவன் அல்ல. வேலைக்கும் நல்ல ஒழுங்கு. எனக்கென்னவோ சந்தேகமாத் தான் கிடக்கு”

“சந்தேகம் எண்டா?” அமரசிங்கம் அண்ணை கேட்க,

Tuesday 1 August 2017

வேலை வேண்டும் - கங்காருப் பாய்ச்சல்கள் (24)


இன்று நான் ஒரு நியூசிலாந்து நாட்டவரை---கிவி ஒருத்தரைச்--- சந்தித்தேன்.

தான் வெலிங்ரன் நகரில் இருந்ததாகவும் இங்கு வந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டதாகவும் சொன்னார்.

என்னை வரவேற்ற முதல் நாடு நியூசிலாந்து. அமைதியான ஆரவாரமற்ற எங்குமே பசுமை நிறைந்த நாடு அது.

அவர் கடந்த நாலைந்து வருடங்களாக, வேலை வழங்கும் ஏஜென்சி மூலமாக தற்காலிக வேலைகள் பல செய்து வருவதாகச் சொன்னார். அவர் அப்படிப்பட்ட வேலைகளைத்தான் விரும்புவதாகவும் சொல்கின்றார்.

தான் இங்கு வந்து முதல் மூன்று நான்கு மாதங்கள் மிகவும் கஸ்டப்பட்டுப் போய்விட்டதாக கவலை கொண்டார். இது எல்லோருக்கும் பொதுவானதுதான்.

Thursday 20 July 2017

ஆச்சர்யம் தரும் எழுத்தாளர் குரு.அரவிந்தன்



ஞானம் - அட்டைப்பட அதிதி கட்டுரை


குரு.அரவிந்தன் - எமது சமகாலத்து எழுத்தாளர். ஊரில் என் அயல் கிராமமான மாவிட்டபுரம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நான் படித்த யூனியன் கல்லூரியின் அயல் பாடசாலைகளான நடேஸ்வரா, மகாஜனாக் கல்லூரிகளில் கல்வி பயின்றவர். இவரது தந்தையார் குருநாதபிள்ளை நடேஸ்வராக்கல்லூரி கனிஷ்ட பாடசாலை அதிபராகவும், உள்ளுராட்சி மன்ற முதல்வராகவும் கடமையாற்றியவர்.

குரு.அரவிந்தன் இலங்கையில் இருக்கும் காலத்தில் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் உயர்கல்வி பயின்று, ’மகாராஜா’ நிறுவனத்தில் கணக்காளராகவும் பின் நிதிக்கட்டுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். 1988 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். தற்போது கனடா / அமெரிக்காவில் கணக்காளராகவும், ரொறன்ரோ கல்விச் சபையில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.