Monday 28 December 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

 

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 27 - உலக நீதிமன்றம்

  
            ஜீவிதாவின் வழக்கின் தீர்ப்பு வழங்கும் தினம். அது எவ்வாறு அமையுமோ என்ற ஏக்கம் அமிர் பூமா இருவரிடமும் நிரம்பவே பிரதிபலித்தது.

            பிரிடிஷ் லேடி அன்ரியின் படுக்கை அறை யன்னலின் திரைச் சீலையை நீக்கிப் பூமா வெளியே பார்த்தாள். காலைச் சூரியனின் ஆரவாரமே இல்லை. இருண்ட வானம் மூஞ்சியைஉம்என்று வைத்திருந்தது. கீழே வீதியில் நிறுத்தி இருந்த கார்கள் வெண்பனிப் போர்வையால் போர்த்தி இருந்தன. கறுப்பு வீதி வெள்ளைக் கம்பளத்துள் சயனித்தது.

            பூமா தனது பச்சைச் சுடிதார் உடையில் ஓல்ட் பெயிலி மத்திய கிறிமினல் நீதிமன்றம் செல்வதற்காகப் படிவழிய கீழே இறங்கியபடி தனது பச்சைச் சிலைட்டைச் சரிபார்த்தாள்.

             நீதிமன்றம் செல்வதற்காக அமிரும் அன்ரியும் வரவேற்பு அறைக்குள் சென்றனர். 

பூமா என்ன கடும் யோசனை? புறப்படு. கெதியாய்ப் போய்ச் சேருவோம்." அமிர் அவசரப்படுத்தினான்.
ஏன்? நேரம் சென்றுவிட்டதா?"
இல்லை. போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டால் நேரத்துக்குப் போய்ச் சேரமாட்டோம்.”
சரி. என்னில் ஒரு சுணக்கமும் இல்லை" என்று கூறியபடி சோபாவைவிட்டு எழுந்தாள்.
பூமா. புதினத்தாள்கள்  எல்லாவற்றையும் தவறாமல் கொண்டு வா."

            கதவைத் திறந்து மூவரும் காரை நோக்கி நடந்தனர்.

            தாண்டித் தாண்டிக் காலை இழுத்து வைத்து நடக்கும் பிரிடிஷ் லேடியைப் பூமா பார்த்தாள். நீலக் காஞ்சிபுரம் பட்டுச் சேலை. கறுப்புச் சாயம் அடித்த கூந்தல், தங்க பிறேம் போட்ட மூக்குக் கண்ணாடி, கண்களை அள்ளும் கழுத்து நிறைந்த தங்க நகைகள். நீலச் சேலையின் மேல் விலையுயர்ந்த பிரெஞ் நாட்டுக் கம்பள முழுநீள குளிர்காலக் கோட். ‘பிரிடிஷ் லேடிஎன்று பூமாவின் மனம் கீதம் இசைத்தது.

            கார் வீதியில் ஜில் வண்டு போல இரைந்துகொண்டு பறந்தது.

            அமிர் தான் இரவல் வாங்கிய காரின் கண்ணாடி ஊடாகக் கண்களை ஏவினான். முன்னும் பின்னும் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வீதியை நிறைத்து விரைந்து கொண்டிருந்தன. அவனின் எண்ணம் ஜீவிதாவின் எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற கவலையுள் நீராடியது.

            அதற்கு எதிர்மாறாக அமிருக்கு அருகே முன் ஆசனத்தில் இருந்த பிரிடிஷ் லேடி வெகு கூதூகலமாக அரசியல் பொரிக்க ஆரம்பித்தார்.

            "தம்பி அமிர், யாழ்ப்பாணத்திலே சிங்களப் படையோடு சண்டை பிடிக்கிறது மடைத்தனம் தம்பி. முன்னர் கரடியாகக் கத்தினவையும் கால் நூற்றாண்டைச் சரியாக முடிக்கயில்லை. பெடியள் துவக்கெடுத்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. இப்ப பொது சனத்துக்குத்தான் கஷ்டமும் நட்டமும். ஆமியின் அட்டகாசம் ஒரு பக்கம். பாதிச் சனம் அகதியாக வீடு வாசல் இல்லாமல் எப்ப ஓயும் சண்டை என்று ஏங்குதுகள். சனத்துக்குத் தொழில் இல்லை. செய்கிற பயிரை விற்க முடியவில்லை. ஆன சாப்பாடு இல்லை. மருந்து இல்லை. இரவிலே வீட்டுக் குள்ளே சிறை. வெளி நாட்டுக்கு ஓடக் கூடியதெல்லாம் பறந்திட்டுதுகள். இருக்கிற சனத்துக்குத்தான் இட்டு இடைஞ்சல் எல்லாம்."

அன்ரிக்கு வெளித்து இருக்கிற அரசியல் ஞானம் எங்களின் பெரியவர்களுக்கு எப்ப வெளிக்கப் போகிறதோ?" பூமாவின் குரல் பின் ஆசனத்தில் இருந்து முன் ஆசனத்துக்குத் தாவியது.

பிரிடிஷ் லேடி கண்ணாடி ஊடாக வெளியே பார்த்தார். வீதி நிறைந்த வாகனங்கள். அவர் உள்ளத்தில் ஆனந்தம். அந்தக் குதூகலத்துக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. கழுதைப்புலி இயக்கத்திலிருந்த அவவின் மூத்த மகனைக் கடத்திச் சென்று தலையைச் சீவி முண்டத்தை மட்டும் ஆவரங்கால் தூவெளியில் உள்ள தாழம் புதருள் வீசிய அச்சுவேலிப் பொறுப்பாளனாக இருத்த கறுப்பு நரி மூத்தான் சிறைக்குள் தள்ளப்பட்ட சம்பவமே அது.

            மூத்தானுக்கு இருபத்தாறு வருடம் சிறை விதிக்கப்பட்டதை நினைத்துச் சந்தோசப்பட்ட பொழுதிலும், அவனின் மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் எண்ணியபொழுது அன்ரியின் உள்ளம் கரைந்து உருகியது.

தம்பி டே அமிர், மூத்தான் பெண்சாதி இப்ப எப்படி?"
இப்பவும் மனநோய் உவாட்டில்தான். யாரும் போய்ப் பார்ப்பதில்லை. பிள்ளைகளின் நினைவே இல்லை."
பிள்ளைகள் எங்கே?" பிரிடிஷ் லேடி கேட்டார்.
சமூக சேவைப் பகுதியினர் பாரமெடுத்து வைத்திருக்கிறார்கள். எல்லா வசதிகள் இருந்தாலும் தாய்தந்தையரோடு வசிப்பது போல வருமே, அன்ரி?"

            கார் ஒரு நெரிசலில் சிக்கி அசையாமல் நின்றது.

நாங்கள் நேரத்துக்குப் போகமுடியாது போல." பூமாவின் ஏக்கம் அமிரின் காதில் விழுந்தது.
நேரத்துக்கு போனால்தான் அந்த வெள்ளைகளிடம் சிக்காமல் முன் வரிசை ஆசனத்தைப் பிடிக்கலாம்."

            பிரிடிஷ் லேடிக்கு அமிரையும் பூமாவையும் ஏதோ கேட்கவேண்டும் என்று இரண்டொரு நாட்களாக ஒரு உந்தல். கேட்கக் கூசிக்கொண்டு இருந்தவரை உசார் முன்னே தள்ளியது. வலப்பக்கத்தில் சவாரி வளையத்தைப் பிடித்திருந்த அமிரை நோக்கி,
தம்பி அமிர், உங்கை கோயிலடியிலே எங்களின் சனம் கதைக்கிறது........" என்பதோடு நிறுத்திக்கொண்டார்.
என்ன கதைக்கினம்?" அமிர் கேட்டான்.
அதைச் சொன்னால் நீ கோபிப்பாய், பெடியா. என்னை இதிலே இறக்கி
விட்டாலும,; விட்டுப் போடுவாய்."
அதென்ன அன்ரி அப்படி விசேடமான கதை."
நீ கோபிக்கமாடN;டன் என்று சொல், நான் சொல்கிறேன்."
நான் கோபிக்கவில்லைச் சொல்லுங்கோ, அன்ரி."
இனி ஜீவிதா வெளியே வரமாட்டாளாம். அதாலே நீ அவளை விட்டுப்போட்டு வேறு ஆரையோ கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் போய் ..."
சொல்லுங்கோ அன்ரி, யாழ்ப்பாணம் போய் ........"
கல்யாணம் செய்யப் போகிறியாம்."

            அமிருக்குச் சிரிப்பு வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், “யாரை?" என்றான்.
வேறை ஆரையெடா பெடியா. உவள் பின் ஆசனத்திலே இருந்து சிரிக்கிறாள், உந்தக் கள்ளியைத் தான்."
அன்ரி, நீங்களே பூமாவைக் கேளுங்கள்."

            பிரிடிஷ் லேடி தலையைத் திருப்பி, தங்கச் சட்டம் போட்ட மூக்குக் கண்ணாடி ஊடாகப் பூமாவை பார்த்து, “எடியே பிள்ளை, உது வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கிற சங்கதி இல்லை. உள்ளதைச் சொல்லடி" என்று கேட்டார்.

            பூமா உரத்துச் சிரித்தாள்.

            “அன்ரி, உங்களுக்கு வீட்டிலே வேலை இல்லை. யாழ்ப் பாணத்தைப் போல இங்கே என்ன ஆடு இருக்கே, குழை ஒடிக்க? கோழி இருக்கே, எண்ணிப்பார்த்து அடைக்க? பேரப் பிள்ளைகளோடு இருக்கிறியளே, அதுகளுக்கு உதவி செய்ய? வாலைப் பருவ ஞாபகம் வந்தால் வாயைப் பொத்திக்கொண்டு இருக்க மாட்டியள். உப்படியே கதை கட்டிப் பொச்சடிக்கிறது?"

            பிரிடிஷ் லேடிக்குக் கழுதை திருப்பி உதைத்தது மாதிரி இருந்தது. அவர் கார் யன்னலூடாக வெளியே நிரையாக அமைந்த கட்டடங்களை நோக்கினார்.

            பூமா கையில் இருந்த பத்திரிகையை மீண்டும் வாசிக்கத் தொடங்கினாள். அவள் கண்களில் ஒரு புதினம் தென்பட்டது. நீலக்கண் அதிகாரி யாழ்ப்பாணப் பயங்கரவாதிகள் தொடர்பாக மேற்கொண்ட சிறப்பான சேவைக்காக ஸ்கொற்லன்ட் யாட் பொலிஸ் தலைமையகத்தின் தலைமை அதிகாரியாகப் பதவி உயர்த்தப்பட்ட செய்தி அது. நீதிமன்றத்துக்கு அந்த அதிகாரி கட்டாயம் வருவார், அவரை வாழ்த்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் பூமா. காரணம் அவளுடைய லண்டன் பயணம் வெற்றி அடையவும் அந்த நீல்கண் அதிகாரியே துணைபோனார்.

            அமிர் காரை நிறுத்திய பொழுது அவளது சிந்தனை துண்டிக்கப்பட்டது. அமிர் காரைவிட்டு இறங்கித் தலை முடியைக் கோதியபடி பூமாவைப் பார்த்தான். அன்ரி மிகச் சிரமப்பட்டுக் காரிலிருந்து இறங்கினார்.

ஹலோ பூமா, ஹலோ அமிர்."
அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அதே நீலக்கண் பொலிஸ் அதிகாரி.
ஹலோ சேர். வாழ்த்துக்கள். உங்களுக்குப் பதவி உயர்வு."
நன்றி பூமா. எப்படி உனக்குத் தெரியும்."
இன்றைய புதினப்பத்திரிகையில் உள்ளது."

சேர், வாழ்த்துக்கள்." அமிர் சொன்னான்.
நன்றி அமிர். எனக்கு அவசர வேலை ஒன்று உள்ளது. நீதிமன்றம் கலைந்ததும் உங்கள் இருவரையும் நான் சந்திக்கிறேன்" என்று கூறிய பொலிஸ் அதிகாரி தாமதியாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.

            அமிர், பூமா, அன்ரி மூவரும் நீதிமன்ற மண்டபத்துள் நுழைந்தனர். பார்வையாளர் பகுதி நிரம்பி இருந்தது. யாவரும் வெள்ளைகள். ஒரு வெள்ளைப் பெண் எழும்பி அன்ரிக்கு இடங்கொடுத்தாள். அமிரும் பூமாவும் பிற்பகுதியில் சுவரை அண்டி நின்றனர்

அமைதி" நீதிமன்றசாஜனின’; குரல் ஒலித்தது.

            நீதிபதி தனது ஆசனத்தில் அமர்ந்ததும் எதிரிக் கூட்டில் நின்ற ஜீவிதாவைப் பார்த்தார். அவள் முதல் நாளைப் போலவே செவ்விளநீர் வண்ணச் சேலை அணிந்திருந்தாள். முதல் நாள் நெற்றியில் பொட்டு இல்லை. அன்று குங்குமப் பொட்டு நெற்றியை அலங்கரித்தது.

            பின்னர் நீதிபதி பொது மக்கள் பகுதியைப் பார்த்தார். பின் சுவர் ஓரமாக அமிர் ஓர் ஏசியன் பெட்டை அருகே நிற்பதை அவதானித்தார்

            இறுதியாக, கடந்த இருபத்தைந்து வருடங்களில் எந்த வழக்கிலும் தோல்வி காணாத எதிரியின் வழக்கறிஞரை நீதிபதி அவதானித்தார்

            சிறிது நேர நிசப்தம் கலைந்தது.

            நீதிபதி நிதானமாக, குரலில் ஏற்ற இறக்கமின்றித் தீர்ப்பை வாசித்தார். அவரின் எதிரே வழக்கறிஞர் மேசையைச் சுற்றி இருந்த சட்டத்தரணிகள் இருக்கையோடு செய்து வைத்த சிலைகள் போல இருந்தனர். எங்கும் பேய் அமைதி.

            நீபதி தொடர்ந்தும் தீர்ப்பை வாசித்தார்.

            "......... அமிரையோ அல்லது அமிரை அடித்த பையன்களையோ எதிரி கொலை செய்ய எத்தனிக்கவில்லை என்பதனை இந்த நீமன்றம் ஏற்றுக்கொள்கிறது.

            “எதிரிதரப்பு வழக்கறிஞர் இலங்கையின் பாராளுமன்றப் பயங்கரவாதமும் முப்படைகளின் அட்டூழியங்களும் இனக் கலவரங்களின் கொடுமைகளும் அங்கு வாழ்கின்ற தமிழர்களை நாட்டைவிட்டு அகதிகளாகத் துரத்தவே திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என்றும், அதனை எதிர்த்தே எதிரி கறுப்பு நரிகள் இயக்கத்தில் சேர்ந்தார் என்றும், எதிரி ஒரு சுதந்திரப் போராளி என்றும் பயங்கரவாதி அல்ல என்றும் வாதிட்டார். அதனை இந்த நீதிமன்றம் பூரணமாக ஏற்கின்றது.

            எதிரி இந்த நாட்டிற்கு  செய்தி சேகரிப்பவராகவே வந்தார். அவருக்கு யாழ்ப்பாணத்திலோ இலங்கையிலோ கிறேற் பிரிட்டனிலோ எதுவித குற்றப் பதிவுகளும் இல்லை. அதனையும் நீதிமன்றம் ஏற்கின்றது.

            எனினும் சுதந்திரப் போராளிகள் தமது இலக்கை அடைந்தபின்னர் சமூகத்தோடு ஒன்றி வாழ்வதற்கு அவர்கள் தூய்மையான போராட்ட வீரராக இருப்பது அவசியம். தனது சமூகத்தோடு சேர்ந்து வாழமுடியாத குற்றம் எதனையும் எதிரி செய்யவில்லை என்பதனை இந்த நீதிமன்றம் ஏற்கின்றது

            எதிரி மீண்டும் ஜனநாயக நீரோட்டத்துக்குத் திரும்பியதை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.

            இருப்பினும் கறுப்பங்கி நெட்டையன் அமிரைக் கொலை செய்யும்படி மிரட்டுகிறான் என்பதை எதிரி பொலிசிற்கு அறிவிக்கத் தவறியபடியாலும், தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தபடியாலும் கடுமையான தண்டனை வழங்கவேண்டி உள்ளது.

            எதிரி தீவிரவாத இயக்கக் கொள்கைகளைக் கைவிட்டதையும், ஜனநாயக நீரோட்டத்துக்கு மீண்டும் திரும்பியதையும் கருத்தில் கொண்டு, எதிரிக்குக் குறைந்தபட்சத் தண்டனையாகப் பதினெட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கிறேன்

            இத்துடன் நீதிமன்றம் கலைகிறது."

            நீதிபதி தனது ஆசனத்தைவிட்டு எழுந்து பக்கக் கதவு வழியாக வெளியேறிவிட்டார்.

            ஜீவிதாவை தொண்ணூறு கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள சிறைச் சாலைக்கு அழைத்துச் செல்ல முன்னர், அவளை நீதிமன்ற வளாகத்தில் ஓர் அந்தத்தில் உள்ள அறைக்கு நான்கு காவலாளிகள் அழைத்துச் சென்றனர்.

            வழக்கு விசாரணையைப் பார்க்க வந்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் இருப்பத்தைந்து வருடங்களின் பின்னர் தோல்வியைத் தழுவிய வழக்கறிஞரை உற்றுப் பார்த்தனர்.

            அவர் கிரீடம் இழந்த சோகத்தில் கீழே மேசையைப் பார்த்தபடி கதிரையில் அமர்ந்து இருந்தார்.

ஊடகவியலாளர்கள் வெளியே கமெறாக்களோடும், ஒலிப் பதிவுக் கருவிகளோடும் அவர் வருகைக்காகக் காத்து நின்றனர்.

            அமிர், பூமா, பிரிடிஷ் லேடி மூவரும் மண்டபத்தைவிட்டு வெளியே வந்தனர்.

            அவ்விடம் விரைந்து வந்த நீலக்கண் பொலிஸ் அதிகாரி, “எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்" என்று அமிருக்கும் பூமாவுக்கும் கூறினான்.

            அவர்கள் வாய் திறக்கவில்லை. தலையை மட்டும் அசைத்தார்கள். கண்கள் குளமாக இருந்தன. சோகத்தின் கொடிய பிடிக்குள் வதங்குவதைக் கண்டான். அவர்களைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

            "நீங்கள் ஜீவிதாவைப் பார்க்க விரும்புகிறீர்களா?"

            அமிரும் பூமாவும் ஒரே நேரத்தில்ஆம்" என்று பதில் சொன்னார்கள். அவர்களது தவிப்பின் நெருடலை முகங்கள் வெளிப்படுத்தின.

            ஐந்து நிமிடங்கள் வரை ஒரு கட்டடத்தின் ஓடை வழியாக நடந்தார்கள். அன்ரியால் விரைவாக நடக்க முடியவில்லை. அதுதான் அவ்வளவு நேரம் எடுத்தது. யாரும் ஒருவரோடு ஒருவர் பேசவில்லை.

            இரு பொலிஸார் காவல்காத்த ஒரு கதவை அவர்கள் அடைந்தனர். அவர்களிடம் அமிரையும் மற்றவர்களையும் கைதியைப் பார்க்க அனுமதிக்கும்படி கூறிவிட்டு நீலக்கண் பொலிஸ் அதிகாரி திரும்பி நகரும் பொழுது, “{நான் வருகிறேன். நீங்கள் கதையுங்கள்" என்று சொன்னான்.

            காவலாளிகள் ஒரு பலகைக் கதவை நகர்த்தினர். இரும்புக் கம்பி அடித்த ஒரு யன்னல் முகத்தைக் காட்டியது. இரும்பு கம்பிக்கு மறுபுறத்தில் உள்ள சிறிய அறையில் ஜீவிதா நின்றாள்

            அமிரையும் பூமாவையும் அன்ரியையும் கண்ட ஜீவிதா ஓவென்று அழுதாள். கண்களிலிருந்து நீர் கொட்டுப்பட்டது. அவளுக்கு இரண்டு கவலை. ஒன்று தூர தேசத்தில் வந்தவிடத்தில் சிறைக்குள் இருப்பது. மற்றது அமிரை இழந்துவிட்டேனே என்ற தவிப்பு.

            யாவரது கண்களிலிருந்தும் நீர் பெருகியது. பேசவே முடியவில்லை. ஏறக்குறையப் பத்து நிமிடங்களுக்குப் பிறகே ஜீவிதாவால் ஒழுங்காகப் பேச முடிந்தது.

            பூமா தான் கொண்டு சென்ற புதினப் பத்திரிகையின் ஒரு செய்தியைச் சுட்டிக்காட்டி அதை யன்னல் வழியாக ஜீவிதாவுக்குக் கொடுத்தாள்.

            ஜீவிதா அதை வாசிக்கத் தொடங்கினாள்.

            'போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவும், அமிரைக் கடத்திச் சென்று கொலை செய்ய எத்தனித்த குற்றத்திற்காகவும் கில்லாடி, மூத்தான், சூட்டி, குகன் ஆகியோருக்கு  தலா இருபத்தாறு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.”

            அந்தச் செய்தியின் அருகே இருந்த 'கள்ளக் கையெழுத்திட்ட சொலிசிற்றர் என்ற தலையங்கம் அவளின் கவனத்தைக் கவர்ந்தது. அதையும் வாசித்தாள்.

            'பொய் ஒப்பமிட்டு  அரசை ஏமாற்றிப் பல இலட்சம் பவுண் பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காகவும், தஞ்ச வழக்கு வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் சூறையாடிய குற்றத்திற்காகவும் சொலிசிற்றர் நாகப்பனுக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.”

            'எப்படி நாகப்பன் சிக்கினார்?” ஜீவிதாவின் மனம் துடித்தது. அவளுக்குத் தெரியாது பூமா தன்னிடம் சேகரித்த துப்புக்களே நாகப்பனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளமை.

            இன்னொரு புதினப் பத்திரிகையையும் பூமா ஜீவிதாவுக்கு நீட்டினாள். 'பயங்கரவாதிகள் உலக நீதிமன்றத்துக்கு ஒப்படைப்புஎன்ற பத்தித் தலைப்பு ஜீவிதாவின் கவனத்தை ஈர்ந்தது. அதை வாசித்தாள்.

'தமிழ் ஈழ விடுதலைப் போராளிகள் என்ற போர்வைக்குள் மறைந்திருந்து யாழ்ப்பாணத்தில் கொலை, கற்பழிப்பு, கொள்ளை, சித்திரவதை முதலியகிறிமினல்குற்றங்களைச் செய்துவிட்டுத் தப்பி வந்து கிறேற் பிரிட்டனில் வாழும் கில்லாடி, குகன், சூட்டி, மூத்தான், நாகப்பன் ஆகிய ஐந்து பயங்கரவாதிகள், உயர் நீதிமன்ற விசாரணையின் பின்னர்  நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகர உலக நீதி மன்றத்திற்குப் பாரப் படுத்தப்பட்டுள்ளனர்.” 

            'நாகப்பன் அப்படி என்ன பயங்கரவாதக் குற்றம் செய்தார்?”

            ஜீவிதாவிற்குத் தெரியாது நாகப்பன் மரநாய் இயக்கத்தில் இருந்த சமயம், நெடுந்தீவில் தனது இயக்க முக்கிய புள்ளியோடு சேர்ந்து பூமாவைக் கடத்திச் சென்றதும், அந்தப் புள்ளி ஆலங்கேணிச் சுடலை அருகே உள்ள பாழடைந்த வீட்டில்; வைத்துப் பூமாவைத் துகிலுரிந்த பின்னர், அவளை வீட்டில் சேர்ப்பதாக ஜீப்பில் ஏற்றி வந்த நாகப்பன் வழியில்; ஒரு பனையடைப்புள் வைத்துப் பூமாவைக் கெடுத்ததும்.

            இரு செய்திகளையும் வாசித்த ஜீவிதாவின் வதனத்தில் மெல்லிதான வெளிச்சம் காரிருளை ஊடறுத்தது.

            பூமாவைப் பார்த்தாள். பச்சைச் சேலையும் பச்சைச் சிலைட்டும். அவை அவளுக்கு அழகூட்டின. பேசும் போதும் தலையைத் திருப்பும் போதும் பொப் கூந்தல் தோள்களில் தவழ்ந்து அவளின் அழகை மிகைப்படுத்திக் காட்டுவதாக எண்ணினாள். ஆனால் அவள் கண்கள் ஏன் மழை சொரிய ஆயத்;தமாகின்றன?

            பூமாவின் கண்கள் திடீரென மழை பொழிந்தன. ஏன் என்பது எவருக்கும் புரியவில்லை. அவள் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்பது ஜீவிதாவுக்கு விளங்கியது.

ஏன் பூமா அழுகிறாய்?"
நீ வெளியே வரும்பொழுது நான் வரவேற்க நிற்கமாட்டேன். நீ சிறையில்வாட நான் போகப் போகிறேன் என்ற கவலை."
எங்கே?"
நாளைக்கு யாழ்ப்பாணம் போகிறேன்."

            அவளை மூவரும் உற்றுப் பார்த்தனர். அமிருக்கு அவள் யாழ்ப்பாணம் திரும்ப இருக்கிறாள் என்பது தெரியும். ஆனால் அடுத்த தினமே திரும்புவது அவனுக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.

            பூமா தனது தோளில் தொங்கிய பையில் இருந்து விமான பயணச் சீட்டுக்களையும் கடவுச் சீட்டையும் எடுத்துக் காட்டினாள்.

ஏன். உன் படிப்பை இங்கே தொடரலாமே?" ஜீவிதா வினாவினாள்.

நான் லண்டனுக்கு அரசியல் தஞ்சம் கேட்கவோ அல்லது அந்தச் சாட்டில் படிக்கவோ வரவில்லை. வந்த வேலை முடிந்துவிட்டது ஜீவிதா. யாழ்ப்பாணத்தில் நான் செய்ய வேண்டிய கடமை ஒன்று  காத்து இருக்கிறது."

            ஜீவிதாவுக்கு அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை.

            தன்னை ஆலங்கேணிச் சுடலை அருகே உள்ள பாழடைந்த வீட்டில் வைத்துப் பங்கப்படுத்திய மரநாய் இயக்க முக்கிய புள்ளியைப் பழிவாங்கவே பூமா யாழ்ப்பாணம் அவசரமாகச் செல்கிறாள் என்பது ஜீவிதாவுக்கு விளங்கவில்லை.

உனக்கென்ன பிள்ளை விசரே? அங்கே ஆமிக்காரன் சண்டைபிக்கிற சாட்டிலே பெட்டைகளை ..." அன்ரி முடிக்கவில்லை.

இந்த நாட்டுக்கு வந்த என்னுடைய வேலையும் முடிந்துவிட்டது. யாழ்ப்பாணத்த்pல் பயங்கரவாத அட்டூழியங்கள் புரிந்த பின்னர் அங்கிருந்து ஒழித்தோடி வந்து லண்டனில் வாழ்ந்த கில்லாடி கோஷ்டியை உலக நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தவே லண்டன் வந்தேன். அது முடிந்துவிட்டது. நானும் யாழ்ப்பாணம் போகிறவன்தான்" என்று அமிர் கூறினான்.

            பிரிடிஷ் லேடிக்கு நெஞ்சிலே பாறாங் கல் விழுந்தமாதிரி இருந்தது. ஏழாயிரம் பவுணும் வட்டியும்?

பூமாவோடு அமிரும் யாழ்ப்பாணம் போகப் போகிறாரோ?' என்று ஜீவிதா எண்ணியபோது, அமிர் குளிருக்கான நீலஜகட்டின் ஜிப்பைஇழுத்தபோது அவனின் வெள்ளைச் சேட்டின் பையில் இரு றோசா மலர்கள் பின்னல் செய்யப்பட்டுள்ளதை ஜீவிதா கண்டாள்.

'என்ன இரண்டு றோசா மலர்கள்? பூமாவின் நினைவாகவோ?" ஜீவிதா தன்னையே விசாரணை செய்தாள்.
 
            முதலாவது றோசா மலரின் கதை ஜீவிதாவுக்கு மட்டுமே தெரியும். அமிர் அவளுக்குச் சொன்ன அந்தக் கதை அவள் மனதில் மங்கி மிதந்தது

'நர்த்தனா என் காதலி. அவள் மீது ஊத்தைவாளி இயக்க உள்@ர்த் தலைவன் குகனுக்கு வெறிகுதறும் மோகம். அவளோடு கதைக்கப் பல தடவைகள் முயன்றும்  அவளைத் தன் வலையில் சிக்கவைக்க அவனால் முடியவில்லை. ஒரு நாள் நர்த்தனா காங்கேசன்துறை பேருந்து நிலையத்தில் நின்ற வேளை அவளது இரட்டைப் பின்னல் ஒன்றில் ஒரு வெள்ளை நித்தியகல்யாணிப் பூவைச் சொருக, நர்த்தனா காலில் இருந்த செருப்பைக் கழற்றி அவனது மூஞ்சியில் வீசினாள்

            அதற்குப் பழிவாங்கக் குகனும் சக ஊத்தைவாளிகளும் சேர்ந்து நர்த்தனாவைக் கடத்திச் சென்று வேள்வி நடத்திய பின்னர் தலையை மொட்டை அடித்துப் பின்னர் கொலை செய்து பெண் உறுப்பில் கிளுவங் கட்டையை இறுக்கி வீமன்காமப் பனந்தோப்புப் பள்ளத்துள் வீசிக் காவோலை கொளுத்தி முகத்தைக் கருக்கி இருந்தனர்.”

            கொலை செய்யப்பட்ட காதலி நர்த்தனாவை நெஞ்சிலே சுமப்பதை நினைவு படுத்தவே முதலாவது றோசா மலர் அமிரின் சேட் பையில் நிரந்தரமாக இருந்தது. அது ஜீவிதாவுக்குத் தெரியும்.

'இரண்டாவது றோசா மலர் யார் நினைவாக?' அவள் தன்னையே வினாவினாள்.

            சேட் பையின் றோசா மலரைப் விடாமல் பார்த்தபடி நிற்பதை அவதானித்த அமிருக்கு, ஜீவிதாவின் வியப்புப் புரிந்தது.

என்ன இரண்டாவது றோசா மலர் புதிதாகத் தோன்றி உள்ளது என்ற யோசனை, இல்லையா?" அமிர் வினாவினான்.
ஓம்" என்றாள் ஜீவிதா.
அது என் ஜீவிதாவின் ஞாபகமாக. நீ என் மனத்தில் என்றும் வாழ்கிறாய் என்பதன் அடையாளம்."

            மூவரும் அமிரைப் பார்த்தனர். ஜீவிதாவுக்கு நம்ப முடியவில்லை. 'உலகமே ஒதுக்கி வைக்கப் போகும் எனக்கு அமிர் வாழ்வளிக்கப் போகிறாரா?”

            அமிர் அமைதியாகக் கூறினான்.

ஜீவிதா நீ வெளியே வருவரை நான் உனக்காக லண்டனில் காத்திருப்பேன். என்னை நம்பி மீண்டும் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்த உன்னைத் தூக்கி வீசிவிட்டுப் போக முடியவில்லை. நீதான் என் மனைவி. உன்னை அழைத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் வைத்து விவாகம் செய்யவே நீ வெளியே வரும்வரை லண்டனில் தங்குகிறேன்."

            பிரிடிஷ் லேடியின் முகத்தில் ஒரு புன்னகை

'பெடியன் மற்ற எளியதுகள் மாதிரி இல்லை. வட்டியும் முதலும் தரும்' என்று சமாதானம் அடைந்தார்.


                             கற்பனை

No comments:

Post a Comment