Friday 30 October 2015

புதியதோர் உலகம் - குறுங்கதை


நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள்.

முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது பேருக்காவது 'போர்வேட்' பண்ணாமல் விடமாட்டாள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் இருவரும் 'மெசஞ்சரில்' (Messenger) செய்திப் பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றார்கள்.

Thursday 29 October 2015

உள்ளும் புறமும் - குறும் கதை



'மெடி கிளினிக்'கில் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். உள்ளே டாக்டர் இராசரத்தினம் ஒவ்வொருவராகப் பார்த்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களில் ஏராளமானவருக்கு அவர்தான் 'ஃபமிலி டொக்ரர், ஜி.பி (G.P)'.

மோகனும் நளினியும் ஒரு மூலையிலே அமர்ந்திருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகன் துறுதுறுவென அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தான். சிறுவர்கள் விளையாடுவதற்கென வைத்திருந்த விளையாட்டுப் பொருட்களைக் கொட்டிச் சிந்தி விளையாடினான். கதிரைகளில் ஏறிக் குதித்து இறங்கினான். அவற்றின் ஒரு முனையால் புகுந்து மறுமுனையால் வெளியேறினான். துள்ளித் துள்ளி நடந்து அழகு காட்டினான். 'கொபி ரேபிளில்' வைத்திருந்த பேப்பர் சஞ்சிகைகளை விரித்துப் படித்து அங்குமிங்குமாக வைத்தான்.

Wednesday 28 October 2015

கதிர்.பாலசுந்தரம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

படைப்பிலக்கிய ஆர்வலர்களுக்கு இலத்திரனியல் வரப்பிரசாதம்
(யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாவார். இலங்கையின் பல்வேறு பாகங்களில் தொழில் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்
Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் குடாநாட்டின் அதிசிறந்த அரசாங்க பாடசாலை அதிபர் எனப் போற்றப்பட்டவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது படைப்புகள் சிரித்திரன், றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகின.
கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) தனது ஈழத்துச் சிறுகதை வரலாறுஎன்னும் நூலில் இவரது அந்நிய விருந்தாளிஎன்னும் சிறுகதைத்தொகுப்பில் உள்ள உயர உயரும் அன்ரனாக்கள் என்னும் சிறுகதை, 1961 – 1983 காலகட்டத்தில் வெளிவந்த ஆயிரக்கணக்கான சிறுகதைகளுள் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பதினெட்டுக்கதைகளுள் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ளார்.
அயராமல் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த தலைமுறை எழுத்தாளரான இவர் தற்போது கனடாவில் இருக்கின்றார். )

Tuesday 27 October 2015

மதங்களின் பெயரால் - குறும் கதை



நண்பன் சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கார் 'அக்ஷிடென்ற்' ஒன்றில் மாட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போதுதான் சந்திரன் ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருந்தான். விபத்து நடந்தது மாலை நான்கு மணிக்கு. இப்போது நேரம் இரவு 10 மணி. அவரின் மகன் கார் ஓடிக்கொண்டு போகும்போது 'புற்ஸ்கிறே' (Footscray) என்ற இடத்தில் விபத்து நடந்தது. அவனுக்கு தலை வெடித்து 12 இழைகள் போடப்பட்டிருப்பதாகவும், தனக்கு நெஞ்சில் கார் பெல்ற் இழுத்ததில் சாதுவான நோ எனவும் சந்திரன் சொன்னான். மகன் நாளைக் காலையில் ஹொஸ்பிட்டலில் இருந்து வீடு வந்துவிடுவான் எனவும், எங்களை பத்துமணி மட்டில் வீட்டுக்கு வந்தால் போதுமானது என்றும் சொன்னான்.

Thursday 22 October 2015

தாமரைக்கு ஒரு செல்வி - வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.


 


திரும்பிப்பார்க்கின்றேன்.

ஈழத்து  இலக்கிய  வளர்ச்சியில்  போர்க்கால இடப்பெயர்வு  வாழ்வை   அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை

' முள்ளும்  மலரும் ' மகேந்திரனின்  இயக்கத்திலும் தாமரைச்செல்வியின்   படைப்பு  குறும்படமாகியது.
                                                  முருகபூபதி


 எங்கள்    நீர்கொழும்பில்  நான்  அறிந்தவரையில்  இற்றைக்கு  70 ஆண்டுகளுக்கு  முன்னர்  தோன்றிய  முதலாவது  சைவஉணவகம் கணேசன்  கபேதான்  நீர்கொழும்பில்  வீரகேசரி  பத்திரிகையின் முதலாவது   ஏஜன்ட்.   வீரகேசரிக்கு தற்பொழுது 85 வயது. கணேசன் கபே   இன்றும்   இருக்குமானால்  அதன் வயது  75.

இந்த கணேசன்  கபேயில்தான்   ஆளுமையும்   ஆற்றலும்  நிரம்பப்பெற்ற  சாதனைப்பெண்மணி      தாமரைச்செல்வியின்  முதல்  நாவல் -  வீரகேசரி  பிரசுரம்  சுமைகள்  எனக்குக்  கிடைத்ததுஅதனை தாமரைச்செல்வி   எழுதியகாலத்தில்   அவருக்கு 24  வயதுதான்  என்ற தகவல்   நண்பர்  புலோலியூர்   ரத்தினவேலோன்  எழுதிய குறிப்பிலிருந்து   தெரிகிறது.

சுமைகள்   நாவலுக்கு   பின்னாலும்  ஒரு  கதை  இருக்கிறது. அதனைப்பின்னர்  சொல்கின்றேன்.

Wednesday 21 October 2015

அந்த உருவம் - குறும் கதை



அனேகமான கோடை விடுமுறையின்போது நாங்கள் மெல்பேர்ணிலிருந்து சிட்னி போய் வருவது வழக்கம். காரை எடுத்தால் சிட்னி போக பதினொரு மணித்தியாலங்கள் போதும்.

மெல்பேர்ண் திரும்ப முன்னர்  ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தை ஒருதடவை தரிசித்துவிட்டுப் போங்கள்என்று எனது சிட்னி நண்பன் ராஜா – சிட்னி போன முதல்நாளே சொல்லியிருந்தான். விருப்பம் என்றால் தானே கூட்டிச் செல்வதாகவும் சொல்லியிருந்தான். ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம் வொலங்கொங் (Wollongong)   என்ற இடத்திற்குப் போகும் வழியில் ஹெலன்ஸ்பேர்க் என்ற நகரில் இருக்கின்றது. சிட்னியில் முதன்முதல் ஆகமநெறிப்படி கட்டப்பட்ட கோவில் இது. இங்கு சிவனுக்கு ஒரு கோவில் தொகுதியும் விஷ்னுவிற்கு ஒரு கோவில் தொகுதியும் என சைவ வைஸ்ணவக்கோவில்கள் ஒரே இடத்தில் உள்ளன.

Saturday 17 October 2015

பறக்காத பறவைகள் - சிறுகதை



அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் நான்கு பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றேன். மனைவி தேநீரை நீட்டுகின்றாள். தேநீரை நின்றபடியே ஒரே இழுவையாக இழுத்துக் கொள்கின்றேன்.

"என்ன எழும்பியாச்சுப் போல!"

"இரவு முழுக்கப் பிள்ளை நித்திரை கொள்ள விடேல்லை!"

"சரி போட்டு வாறன்."

கதவைப் பூட்டி விட்டு, ஒரு கள்ளனைப் போல, படிகளிலிருந்து இறங்கி இருளிற்குள் நடந்து செல்கின்றேன். மெதுவாக நடக்காவிடில் நாய்கள் விடியலை ஆரவாரப் படுத்திவிடும். தரிப்பிடத்தில் நின்ற 'ஹொண்டா சிவிக்' கார் குளிருக்கு ஸ்ராட் செய்ய மறுக்கின்றது. துருப்பிடித்த அந்தக்கார் நீண்ட நாட்களாக எனக்குத் தொல்லை தருகின்றது. கடற்கரைக்குக் கிட்ட இருப்பதால் கார்கள் இலகுவில் துருப்பிடித்து விடுகின்றன. 'மனுவல் கார்' என்ற படியால் தள்ளி ஸ்ராட் செய்யலாம். வீட்டிற்குச் சென்று மனைவியை அழைத்து வந்தேன். கார் சரிவில் நின்ற படியால் தள்ளுவதற்கு மனைவிக்கு சிரமமிருக்காது. இருப்பினும் குழந்தை பிறந்து மூன்று மாதங்களில் 'பச்சை உடம்புக்காரியான' அவளிற்கு சிரமம் கொடுப்பதையிட்டு கவலையாக இருந்தது. வேறு வழியில்லை. தள்ளிவிட்டு வயிற்றைப் பொத்தியபடியே படியேறிப் போகின்றாள் அவள்.
இந்தப் பூபாள ஆரவாரம் எல்லாம் - நியூசிலாந்தில் உள்ள குடிமனைகளுக்கு புதினப்பத்திரிகை விநியோகிப்பதற்குத்தான்.

Monday 12 October 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 18 - ஓடிப்போனவள்

 



நேரம் காலை 9.00 மணி. இந்தியாவுக்கு விமானம் புறப்பட இன்னும் ஆறரை மணி நேரம் மட்டுமே இருந்தது.

                அமிர் தன் எதிரே தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் இருந்த கறுப்பு குரங்கு-பொம்மையைப் பார்த்தான். அது முற்றத் துறந்த முனிவனைப் போல கைகளை முழங்காலில் பதித்து கண்களை மூடியபடி செங்குத்தாக இருந்து தவம் செய்வது போல அவனுக்குப்பட்டது.

                கில்லாடியும் நண்பர்களும் அயர்லாந்திலிருந்து திடீரென வந்தால் என்ற அச்சம் அமிரை மிரட்டித் துன்புறுத்தியது.

Saturday 10 October 2015

படித்தோம் சொல்கின்றோம்



கலைவளன்  சிசு. நாகேந்திரனின்  பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று   அகராதி

தாத்தாமார்  மேற்கொண்ட    தமிழ்ப்பணியை   பேரர்களும் தொடரவேண்டும்

- முருகபூபதி

 




அவுஸ்திரேலியாவில்  வதியும்  95  வயது  தமிழ்த்தாத்தா  கலைவளன்  சிசு.நாகேந்திரன்  அவர்களைப் பார்க்கும்தோறும்  எனக்கு .வே. சாமிநாத அய்யர்  தாத்தாவும்,  வீரமாமுனிவர்  என்ற  பாதிரி தாத்தாவும்  நினைவுக்கு  வருகிறார்கள்.

சாமிநாத அய்யரும்  வீரமாமுனிவரும்  வாழ்ந்த   காலத்தில் கம்பியூட்டர்  இல்லை.   அவர்களுக்குப்பின்னர்  வந்த  பேரர்கள் காலத்தில்  அந்த  வரப்பிரசாதம்  கிட்டியிருக்கிறது.

பழகும்  தமிழ்ச்சொற்களின்  மொழிமாற்று  அகராதி  என்ற 577 பக்கங்கள் கொண்ட  இந்த  அரியநூலை  தமது  நீண்டநாள் தேடுதலிலும்  கடும்  உழைப்பிலும்  வெளியிட்டுள்ள  சிசு. நாகேந்திரன்   தமது  95  வயதிற்குப்பின்னரும்,  இந்த  அகராதியின் இரண்டாம்  பாகத்தை  தற்பொழுது  தயாரித்துக்கொண்டிருக்கிறார் என்பது   அதிசயம்தான்.  ஆனால்,  அதுதான்   உண்மை.

Friday 9 October 2015

செக்கியூரிட்டி - சிறுகதை


வவனியாவில் இருந்து மன்னார் போகும் புறப்படும் பாதையின் நுனியில் எமது வேலைத்தலம் இருந்தது. வேலைத்தலத்திற்கு முன்னே சில அரச அதிகாரிகளின் வசிப்பிடம். பின்னே புகையிரதப்பாதை. எதிரே மன்னார்வீதிக்கு அப்பால் ஒரு சிங்கள மகாவித்தியாலயம்.

வளவிற்குள் ஒரு டோசர், மூன்று பக் லோடர், ஒரு ஹெவி றக், ஒரு கல்லுடைக்கும் இயந்திரம், இரண்டு வைபிறேஷன் மிஷின்கள், ஏழெட்டு டிராக்டர்கள்.

வளவைச் சுற்றி முட்கம்பி வேலி நாற்புறமும் ஓடுகிறது. தற்காலிக வேலிதான். அதற்குள்ளால் மனிதர்களும் நாய்களும் நுழைந்து வெளியேறலாம். வாகனங்களை நகர்த்த முடியாது; களவெடுத்துக் கொண்டு போக முடியாது. வாகனங்களை முன்னேயுள்ள செக்கியூரிட்டி கேற்றிற்குள்ளால் பதிவு செய்துவிட்டுத்தான் கொண்டுபோக முடியும். ஒரு பொறியியலாளர், அவருக்கு உதவியாக ஒரு அட்மினிஸ்றேற்றிவ் அஷிஸ்டென்ற், இரண்டு செக்கியூரிட்டிகள் மற்றும் இருபத்தைந்து தொழிலாளர்கள். இங்கே ஒரு பெண் பிரஜைகளும் வேலை செய்யவில்லை.

Monday 5 October 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 17 - சுவர்க்கத்தில் நிட்சயமாகும் கலியாணங்கள்

 


நான்கு வாரங்களின் முன்னர் அன்ரி வீட்டில் பட்ட கசப்பான அனுபவம் இன்னும் நதியாவைவிட்டு அகலவில்லை. அது அவளுக்கு ஓர் அற்ப விடயம். அதைவிடப் பெரிய கலாச்சாரப் புனிதத்தை உதைக்கின்ற சுமையை அவள் தலைக்குள் காவுவதுதான் அமிருக்கும் பிடிபடவில்லை.

                நதியாவின் போக்கை உணரமுடியாத அமிர் அவளின் கடவைச் சீட்டையும் விமான ரிக்கற்றையும் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி, அன்ரியின் வரவேற்பறையில் குரங்கு-பொம்மையைப் பார்த்து யோசித்தபடி இருந்தான். நதியாவை எண்ணும் பொழுதெல்லாம் கூடவே கில்லாடியின் உச்சி மொட்டந்தலை, அதன் அடிப்பாகத்தில் கிடக்கும் கத்தை கத்தையான மயிர், அவனது சிவந்து வெறிக்கும் கண்கள், அவனது யாழ்ப்பாணக் கொலைகள் கொடூரங்கள் - அவைகளே அமிருக்குத் தெரிந்தன. எனினும் நக்கினார் நாவிழந்தார் போல நதியா வா என்றால் வாய்திறவாது வாலாட்டுவதும், செய்யென்று சொல்லிமுடிக்க முன்னே பாய்ந்து எழுவதுமான ஒரு மந்திரக் கூட்டுக்குள் அவன் சிக்கியிருந்தான்.

Friday 2 October 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (7)

கூப்பிடு தூரம்
சிட்னியில் தமிழர்கள் 5, 6 இடங்களில் செறிந்து வாழ்கின்றார்கள். இதனால் சிட்னி போகும்போது நண்பர்கள் உறவினர்களைச் சந்திப்பது இலகுவாகின்றது. மெல்பேர்ண் அப்படியில்லை. ஒன்றிரண்டு பகுதிகளைத்தவிர தூரத்தூரவே பெரும்பாலும் இருக்கின்றார்கள். இதனால் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்றால் ஒன்றரை, இரண்டு மணிநேரம் கார் ஓடவேண்டும்.

சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவர் மெல்பேர்ண் வந்து போகும் சமயங்களிலெல்லாம், அவரது மனைவி தனது சினேகிதியைப் பார்ப்பதற்குதன்னைக் கூட்டிசெல்லுமாறு கணவரைக் கேட்பார். அவரும் தூரத்தையும் நேரத்தைக் காரணம் காட்டி தட்டிக்கழித்து விடுவார். "உமது ஃபிரண்டைப் பார்ப்பதென்றால் 2 மணித்தியாலக்கள் கார் ஓடவேண்டி வரும். அதுவும் கடைசி அரைமணி நேரம் மலைப்பாங்கான பாதையில் ஓடவேண்டும்" என்று சமாளித்துவிடுவார்.