Friday 31 July 2015

இராஜகாந்தன் கவிதைகள் - 7


திருவிளையாடல்

நாளும் முதலிரவோ
நாணத்தால்
முகம் சிவக்குதோ வானம்,
சூரியன் பள்ளியறை செல்லும் போது.

அவள் வருகை பார்த்து
கேலி செய்து கண் சிமிட்டும்
நல்ல நண்பிகளாம்
நட்சத்திரங்களைக் காண நாணி
முகில் புடவையால்
முகம் மூடுதோ
வெண்ணிலவு?

பசுமை நிற பட்டுச் சட்டையால்
மலை முகடுகளை
மறைத்து நிற்கும்
நில மகளின்
நீல நிறக் கடல் சேலையை
தொட்டிழுத்துச் செல்லமாய்
தொந்தருவு செய்யுதே காற்று.

கறுத்துஞ் சிவந்தும்
காய்ந்தும் நனைந்தும்
கவர்ச்சியைக் காட்டும்
புவியினை
புது புதுக் கோணங்களில்
புகைப்படம் பிடிக்குதே மின்னல்.

அடடா இங்கும் சமர்தான்
எங்கும் குண்டுகள் வெடிகக்குதே.
இடியோசை கேட்டு
குடைக்குள் பதுங்கினேன்.

பூமகளை நனைத்து ஈரப்புடவையில்
அவள் அழகை ரசிக்க நினைத்து

மழை பொழியுதே வானம்!

No comments:

Post a Comment