Friday 31 July 2015

இராஜகாந்தன் கவிதைகள் - 7


திருவிளையாடல்

நாளும் முதலிரவோ
நாணத்தால்
முகம் சிவக்குதோ வானம்,
சூரியன் பள்ளியறை செல்லும் போது.

அவள் வருகை பார்த்து
கேலி செய்து கண் சிமிட்டும்
நல்ல நண்பிகளாம்
நட்சத்திரங்களைக் காண நாணி
முகில் புடவையால்
முகம் மூடுதோ
வெண்ணிலவு?

Tuesday 28 July 2015

இருப்பும் இழப்பும் - சிறுகதை

"மஞ்சு! குசினிக்குள்ளை சாப்பாடு தட்டாலை மூடி வைச்சிருக்கிறன். எடுத்துக் கொண்டு போய் மாமாவுக்குப் பக்கத்திலை வைச்சுவிடு பிள்ளை."

பழைய கதிரை ஒன்றிற்குள் இருந்து, கிழிந்த உடுப்பு ஒன்றைத் தைத்துக் கொண்டிருந்த மங்கை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஓலைப்பாயிலிருந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த மஞ்சு, ஒருவித ஏக்கத்துடன் தாயை நிமிர்ந்து பார்த்தாள்.

"அண்ணாவை வந்தவுடனை எல்லாருமா சேர்ந்து ஒண்டா சாப்பிடுவம் எண்டு சொன்னியள். இப்ப?"

Sunday 26 July 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 7 - நச்சுக்  குருவிச்சை


அமிர் லண்டனை அடைந்தபோது கோலோச்சிய கோடையும் மறைந்து குளிர்  கால உதறலும் எப்பவோ ஆரம்பித்துவிட்டது. அமிர் தனது அறையிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தான். மூத்தான் தனது அறைக் கதவு இடுக்கு வழியாக வேவு பார்ப்பதை அமிரின் வருகையை எதிர் பார்த்து வரவேற்பறை வாசலில் நின்ற நதியா கவனிக்கவில்லை.


                “என்ன முகம் வாடியிருக்கு?" என்று கேட்டபடி நதியா தேநீர்க் கோப்பையை நீட்டினாள்.
எனக்கு தேநீர் வேண்டாம். சொலிசிற்றரின் கந்தோருக்குப் போய் ஜீவிதாவை அவசரமாகச் சந்திக்க வேண்டும்" என்று கூறியபடி அமிர் வீட்டைவிட்டு வெளியேறினான்.
'ஏன் உவர் திடீரென ஆளே மாறிவிட்டார்? காலமை தேநீரும் குடியாமல் அவசரமாகப் போகிறார்' என்று தன்பாட்டில் கூறியபடி கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். நிலத்தை வெள்ளைப் பனிநுரை மெல்லிய படையாக மூடியிருந்தது. அமிர் வேகமாக நடப்பதை பார்த்துக்கொண்டே நின்றாள்.

Wednesday 22 July 2015

ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

 


அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில், ஞானம் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் சிறப்பிதழ்அறிமுகம், எதிர்வரும் ஆடி மாதம் 26ஆம் திகதி (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரையில்ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் (Peacock Room, Shri Shiva Vishnu Temple, 52 Boundary Road, Carrum Downs, Vic 3201) நடைபெறும்.

Tuesday 21 July 2015

கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

 


படித்தோம்  சொல்கின்றோம்

புகலிடத்தையும்  தாயகத்தையும்  முடிச்சுப்போடும் கதைகளிலிருந்து    வெளியாகும்  செய்திகள்

முருகபூபதி  -  அவுஸ்திரேலியா


அண்மையில்  எனக்கு  வந்த  மின்னஞ்சலில்  தனித்தமிழியக்கம் நடத்தும்  தனித்தமிழ்ச்  சிறுகதைப்போட்டி -  பரிசு  3000.00  உருவா.  என்ற  தலைப்பில்  ஒரு  அறிவித்தல்

எனக்கு  அதனைப்படித்ததும்  குழப்பமாக  இருந்தது.   அது  என்ன தனித்தமிழ்....? அது  என்ன  உருவா...?

ஏனைய  மொழிகளில்  இத்தகைய  திருக்கூத்துக்கள்  இல்லை  என நம்புகின்றேன்.   நான்  இலக்கியப்பிரதிகளை   எழுதவும்,  பேசவும் தொடங்கிய   காலத்தில்  மூத்த  தமிழ்  அறிஞர்  மு.வரதராசனின் நூல்களைப்படித்தேன்.   அவருடைய  சிறுகதைகள்,   நாவல்கள் படித்துவிட்டு அந்த  வாசிப்பு  அனுபவம்  எனக்கு  எந்தப்பயனும் தராது    எனத்தீர்மானித்து வெளியே  வந்துவிட்டேன்.

அதன்பிறகு  அவரது  எழுத்துக்களில்  எனக்கு  ஆர்வமே  இல்லாது போய்விட்டது.    மக்கள்  மொழியை   இந்த  தனித்தமிழ்  தீவிரவாதிகள் ஏனோ மறந்துவிடுகிறார்கள்.   காலத்தையும்  வென்று  வாழ்வது இலக்கியம். இன்று தமிழில்  படைப்புமொழி   எத்தனையோ கோலங்கள்    கொண்டுவிட்டன. மண்வாசனைபிரதேச  மொழிவழக்கு தலித்  இலக்கியம்,  வட்டார வழக்கு, புகலிடத்தின்  புதிய மொழிப்பிரயோகம்  என்பனவற்றையெல்லாம் பதிவுசெய்து,   தமிழ் தரணியெங்கும்   பரவிக்கொண்டிருக்கும்  வேளையில், தனித்தமிழ் இயக்கம்   அதனைப் பின்பற்றுபவர்களையே தனிமைப்படுத்திவிடலாம்.

போட்டிக்கென   கதைகள்  கேட்டு  உருவா பரிசலிக்கப்போகின்றவர்களுக்கு சுதாகரும்  கதை   அனுப்பிவிடுவாரோ  என்றும்  அஞ்சினேன்.   ஏனென்றால் அவரது இரண்டாவது    தொகுதிக்கதைகள்  அத்தனையும்  பரிசுபெற்ற சிறுகதைகள்.

Monday 20 July 2015

கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம் - - விமர்சனம்

 
எஸ்.கிருஷ்ணமூர்த்தி / அவுஸ்திரேலியா

சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்பு யாழ் பல்கலைக்கலைக்கழக மருத்துவபீட மாணவர் சொன்ன கருத்து ஓன்று என்னை சிந்திக்க வைத்தது. யாழ் வைத்தியசாலைக்கு பயிற்ச்சிக்காக சென்ற போது அங்கு செல் அடிபட்டு வரும் ஆட்களுக்கு சத்திரசிகிச்சையை மாணவர்கள் செய்வார்கள். அது எங்களுக்கு நல்ல அனுபவம்தானே என்று யாரும் கருதினால் அது தவறானது. ஏனெனில் வெட்டுவதும் தைப்பதும் மருத்துவபீட மாணவர்களுக்கு பெரிய நன்மை தருப்போவதில்லை. நாம் எமது கவனத்தை இதில் செலுத்துவாதால் வேறு நோய்களைப்பற்றியோ அதற்கான சிகிற்சைபற்றிய அனுபவம் எமக்கு கிடைப்பதில்லை. இதேபோல் செல்லடிபட்ட நோயாளிகளினிடம் எமது கவனம் முழுமையாக இருப்பதனால் ஏனைய நோயாளிகள் கவனிப்பாரின்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிவார்கள். இது மருத்துவத்துறைக்கு மட்டுமல்ல இலக்கியத்துறைக்கும் பொருந்தும்.

Sunday 19 July 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 6 - எச்சில்  நக்கும்  மரநாய் 
                  
                                             
                                சால்வை மூத்தான் முதல்நாள் நள்ளிரவு விபரித்த யாழ்ப்பாணம் புத்தூரில் நடந்த கோரக் காட்சிகள் இன்னும் அமிரின் நினைவில் நின்று அச்சுறுத்தின. சாவீடுகளில் எழும்  சாபங்களும் ஓலக்குரல்களும், காதைப் பிளக்கும் பறைமேளங்களின் இடி ஓசைகளும் அவனுக்குக் கேட்டன, உற்றார் உறவினர் பூமியில் அடித்து அழுது புழுதியில் உருண்டு புரளும் காட்சிகள் அவன் மனக்கண்களை வாட்டி வருத்தின. 

                அந்த அனர்த்த உணர்வுகள் மனதை உறுத்த, ஜீவிதா இரண்டு தினங்களுக்கு முன்னர் சொல்லிய வீதியோர நடைபாதை வழியே நடந்து சென்று எதிரே பிளெசற்  பூங்காவைக் கண்ட அமிர், அந்த பூங்கா கிழக்கிலும் தெற்கிலும் வீதிகளை எல்லைகளாக உடைய ஒரு பெரு நிலப் பரப்பில் அமைந்திருப்பதைக் கண்டான். அங்கே, அந்த மாலைப் பொழுதில் அவனைச் சந்திக்க வருவதாக ஜீவிதா தொலை பேசியில் கூறியிருந்தாள்.

கங்காருப் பாய்ச்சல்கள் (-17)

யாருக்கு எழுதுகின்றீர்கள்?

எனது புத்தக வெளியீட்டுவிழாவிற்கு வருகை தருமாறு சொல்வதற்காக - சிட்னியில் எனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனது முதல் புத்தக வெளியீடு. அந்தப் பெண் எனது முயற்சி பற்றி பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளின் கணவன் ஒரு பொறியியலாளர். அருகேயிருந்து எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர், "நீங்கள் யாருக்குக் கதை எழுதுகிறீர்கள்? குழந்தைப் பிள்ளைகளுக்கா?" என்றார்.

"இல்லை! இல்லை!! வளர்ந்தவர்களுக்குத்தான்" என்றேன் நான். அவர் என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

Saturday 18 July 2015

இராஜகாந்தன் கவிதைகள் – 6


அகிலமே காத்திருக்கும்

வான் வெளியில் விண்மீன்கள்
     இருளுக்காய் காத்திருக்கும்.

தேய்ந்து வரும் வெண்ணிலவு
     பௌர்ணமிக்காய் காத்திருக்கும்.

ஆழ்ந் துறங்கும் ஆதவனோ
     விடியலுக்காய் காத்திருக்கும்.

காய்ந்திருக்கும் கானகமோ
     கடுமழைக்காய் காதிருக்கும்.

Friday 17 July 2015

எங்கே போகிறோம்? - சிறுகதை


கொழும்பிலிருந்து புறப்பட்ட சொகுசு பஸ், நீர்கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

புறப்பட்ட நேரத்திலிருந்தே செல்வராசா முகத்தை 'உம்' என்று வைத்திருந்தான். உயர்ந்த தோற்றமும், ஒடிந்து விழுமாப் போன்ற மெல்லிய தேக அமைப்பும் கொண்டவன் அவன். ஆங்காங்கே தலை நரைக்கத் தொடங்கியிருந்த போதிலும் வயது ஐம்பதிற்குள்தான் இருக்கும். எண்ணெய் பூசி தலையை ஒழுங்காக வாரி விட்டிருந்தான்.

அவனுக்குப் பக்கத்து ஆசனத்தில் சந்திரன். சந்திரன் செல்வராசாவிற்கு நேர் எதிரான தோற்றம் கொண்டவன். கொழுத்த உடலமைப்பு. சுருள் சுருளான கன்னங்கரேலென்ற கேசம். கலகலப்பான பேர்வழி. அவன் செல்வராசாவுடன் கதைத்துவிடத் துடித்தான்.

அவர்களுக்கு முன்னால் ஒரு சிறுவன் - ஒரு சிறுமி. அக்காமீது சாய்ந்திருந்த சிறுவன், ஏதோ குறும்பு செய்திருக்க வேண்டும். 'கிளுக்' என அவள் சிரிக்க, அந்தச் சிரிப்போடு அவள் கன்னங்களும் சிவந்து போயின. அழுக்குப் படாத சிரிப்பு என்றுமே அழகானது தான்.

Sunday 12 July 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 5 - கரி பூசிய கறுப்பு நரி


                கில்லாடி ஆனந்தத் தேன் மழையில் நீராடினான். பொலிசிலிருந்து மீண்ட மூத்தானைத்; தாவியணைத்து வரவேற்பு அறைக்குக் கூட்டிச் சென்ற பொழுது, “கில்லாடி அண்ணை, நாய்ப் பொலிஸ்காரன் வழக்குத் தொடுக்கப் போகிறானாம்" என்று பொரிந்தான் மூத்தான்.
பயப்படாதே மூத்தான். வழக்கு வெல்கிறது இந்தக் கில்லாடிக்குச் சின்ன விடயம். நல்ல வெள்ளைக்கார பரிஸ்ரராகப் பிடிப்பம். அது சரி, என்ன நடந்தது?"
கோட்டானோ ஊத்தைவாளியோ சைகை தந்திருந்தால் பொட்டலங்களை தூக்கி  வீசி எறிந்துபோட்டு மாயமாக மறைந்திருப்பேன்."
இரண்டு பேரும் என்ன செய்தவன்கள்?"
கோட்டான் வழமையைப் போலத்தான். வெள்ளைப் பெட்டையளிலே சொக்கிப் போய் நின்றான். ஊத்தைவாளி கண்ணிலேயே படவில்லை."
வரட்டும் அவைக்கு நல்ல பாடம் படிப்பிக்கிறன். உவன்களை இனி எங்கள் கூட்டத்தாலே கலைக்கவேணும்."
கில்லாடி அண்ணை. அப்படிச் செய்து போடாதையுங்கோ. அவன்கள் போய் எங்களின் தொழிலை பொலிசுக்குக் காட்டிக் கொடுத்துப் போடுவான்கள்."
பொலிசுக்குக் காட்டிக் கொடுத்தால், பிறகுதான் இந்தக் கில்லாடியைப் பற்றி அவைக்கு விளங்கும். அவைக்கு விளங்கயில்லை நான், கழுதைப்புலி, எத்தனை பேரைச் சுட்டுப் பொசுக்கி வீமன்காமம் கொலனிக்குள்ளே வீசினனான் என்று." இவ்வாறு கத்திய கில்லாடியின் கண்களில் கொலை வெறி தெறித்தது.
அவன்களும் யாழ்ப்பாணத்தில் உந்தத் தொழில் செய்துபோட்டுத்தான் லண்டனுக்கு வந்தவன்கள். அவன்களோடு கொளுவ வேண்டாம் அண்ணை."

Friday 10 July 2015

ஆ! - சிறுகதை


            1.
            மாடு ஒன்று அலறும் சத்தம் விட்டு விட்டுக் கேட்கின்றது. அதிகாலை நாலு மணி இருக்கலாம். நிசப்தமாகியிருந்த  கிராமத்துத் தெருக்களில் ஒன்றில் ஒரு பெண் இழைக்க இழைக்க விரைந்து வருகின்றாள். அவளின் நடையில் நித்திரை குழம்பிய துயரம் தெரிகிறது. கோடை காலமாதலால் எங்குமே வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டது. பிரதானவீதிக்கு வந்துவிட்ட அவள், பதுங்கி நாலாபுறமும் கண்களைச் சுழல விட்டாள்.

            இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்ட காலம். எங்கேயும் அவர்கள் பதுங்கி இருக்கலாம் அல்லது திடீரென்று 'ரோந்து' செய்யலாம். ஒருவரும் இல்லையென்று உறுதி செய்து கொண்டபின், பிரதான வீதியில் காலடி எடுத்து வைத்தாள். சற்று நேரம் பிரதான வீதியில்  நடந்த பின், அடுத்து வந்த குச்சொழுங்கைக்குள் இறங்கி மூச்சுப்பிடித்து ஓடத் தொடங்கினாள். ஓட்டம் செல்லாச்சிக்கிழவியின் படலையடியில் வந்து முடிந்தது. சற்று நேரம் மூச்சை விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

Thursday 9 July 2015

நெருடல்


நள்ளிரவு, நாய்களின் ஓலம்
சருகுகளின் சலசலப்பு
நான்கு சுவர்களுக்குள் படுக்கை
என்றாலும் நடுக்கம்தான் வருகிறது.

 இது குளிரின் நடுக்கமன்று,
குண்டின் நடுக்கம்.
பக்கத்து அறையில் அம்மா, தங்கை
முன் விறாந்தையில் அப்பா, தம்பி
ஓர் கணம் கிரிசாந்தி
கமலிட்டா வந்து போனார்கள்.

ஓர் நெருப்புக் குச்சியேனும் 
கிடைக்காதாவென தானாகக்
கைகள் தலையணைக்குள் நீளுகையில்
நான்கு 'பூட்ஸ்' ஒலிகள்
நகர்ந்து போயின.

Monday 6 July 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 4 - கனவான்கள்



பயந்து மிரண்டுகொண்டிருந்த கில்லாடியின் நினைவு அலைகளில், முதல் நாள் இரவு கண்ட கனவு மீண்டும் புத்துயிர் பெற்றது. அவன் வீமன்காமக் கொலனிப் பனையடைப்புப் பள்ளத்துள், கொலை செய்து வீசிய தெல்லிப்பழைப் போஸ்ற் மாஸ்ரர் ராசையரின் பிரேதம் எழுந்து நின்று இரத்தம் கொட்டும் ஆந்தை விழிகளால் முறைத்துப் பார்த்துக் கில்லாடியைக்  கைகாட்டி அழைத்து, கழுத்தைத் திருகி அவனது குடலை உருவித் தனது கழுத்தில் மாலையாகப் போட்டு ஆவேசமாகக் கூச்சலிட்ட காட்சி மீண்டும் தோன்ற, அது வரப்போகிற பேராபத்தின் முன்னெச்சரிக்கை என்று பயந்து நடுங்கிய கில்லாடி, கோட்டான் சூட்டி கோஷ்டியை தொழிலுக்குஅன்று நண்பகல் அனுப்பிய காட்சியை மீட்டுப் பார்த்தான். அவனுக்குச் சொல்லப்படாத நிகழ்ச்சிகள் பலவிருந்தன.
 
                                                            
அன்று மாலை 1.00 மணியளவில் கோட்டான் சூட்டி, சால்வை மூத்தான், ஊத்தைவாளி குகன் மூவரும், தங்கள் பரமரகசிய தொழிலுக்குப் புறப்பட்டனர்.  

சால்வை மூத்தான் பார்க்கிங் நகரில் ஒரு வீதியோர நடை பாதை மூலையில்; நின்றான். வீதியிலே வாகனங்கள் நெருங்கியடித்துச் சென்று கொண்டிருந்தன. நடை பாதையிலும் பாதசாரிகள் நிறைந்திருந்தனர். அருகே உள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. அது வாடிக்கையாளரை அவன் சந்திக்கின்ற வழமையான இடம்.

Sunday 5 July 2015

அழகின் சிரிப்பு - குறும் கதை

ஷோபனா நிலைக்கண்ணாடி முன் நிற்கின்றாள். தன் ஆடைகளை சரி செய்தவாறே அழகு பார்க்கின்றாள்.
பிறை நிலவிற்குள் செந்நிறப்பொட்டு. முகமெங்கும் மெல்லிதாக அரும்பி நின்று மினுப்புக் காட்டும் வியர்வைத் துளிகள். லிப்ஸ் ஸ்டிக்கில் கூரிய செவ்வாய். நீலநிற சுடிதாரில் அழகாய்த்தான் தெரிந்தாள். சரி! பார்த்தது போதும் என்று தனக்குள் எண்ணியவாறே பின்னால் திரும்புகின்றாள்.

"எப்படிடா செல்லம்! நான் வடிவா இருக்கிறேனா?"

பதில் இல்லை.