Sunday 31 May 2015

வந்தது வசந்தம் - கவிதை

இராஜகாந்தன் கவிதைகள் - 3
துகில் களைந்தெறிந்து
துறவறம் போன
சிறுபெரு மரங்களெல்லாம்
இல்லறம் நடத்த
திரும்பிய  தேனோ?

பனியிருள் போர்வையுள்
தனை மறைத்துறங்கிய
சூரியன் கண்திறந்து
தம்மையே நோக்குதல் கண்டு
துளிரிலை கொண்டு
வளர்ந்து வளர்ந்து
வாகான உடம்பையும்
கொடியிடை கொம்பையும்
கால்வரை மூடி
பச்சைப் படுதாவுள்
தலையினை நுழைத்து
குமரிகள் அன்ன
நாணிக் கோணி
தங்களுள் வளர்ந்த
வசந்த கால மரங்களெல்லாம்
வயதுக்கு வந்தனவோ?

Tuesday 26 May 2015

'லப் ரொப் – லப் டப்’ குறும் கதை


சனிக்கிழமை மதியம். சாப்பாடு வாங்குவதற்காக ‘கே.எஸ் ஸ்ரோர்போயிருந்தேன். அந்தப் பல் பொருள் அங்காடியில் உணவு வகைகளும் செய்து விற்கின்றார்கள். காரை நிற்பாட்டுவதற்கு ஒரு தரிப்பிடம் தேடி போதும் என்றாகிவிட்டது. பொதுவாக சனிக்கிழமை என்றால் எங்கும் சனக்கூட்டம். காரைவிட்டு இறங்கியதும், என் பின்னாலே இரண்டு ஆப்பிரிக்கர்கள் வந்து நின்றார்கள்.

“லப் ரொப் வேண்டுமா சேர்?இரண்டு பேருமே ‘ரைகட்டி கச்சிதமான ஆடைகளுடன் தோற்றமளித்தார்கள். இந்த இடத்தில் இப்படிப்பட்ட வியாபாரம் நடப்பது சகஜம்தான். இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் இதே இட்த்தில் ஒரு ஐ போன் வாங்கியிருந்தான். இன்னமும் அதைப் பற்றியே சொல்லிப் புளுகிக் கொண்டிருப்பான்.

“எவ்வளவு காசு?

Monday 25 May 2015

இராஜகாந்தன் கவிதைகள்



       தெல்லிப்பழை யூனியன், புத்தூர் ஸ்ரீசோமாஸ் கந்தா கல்லூரிகளில் கல்விச்செல்வத்தை வளர்த்துக்கொண்ட சின்னராசா இராஜகாந்தன் இதுவரை முப்பத்தாறு கவிதைகள் எழுதியுள்ளபொழுதிலும், அச்சுவாகனம் ஏற்றுவது பற்றிய ஆர்வம் அவர் மனதில் எழுந்ததில்லை. அவரது இல்லத்தரசி அவருக்குத் தெரியாமல் அவற்றை அச்சில் பதிவு செய்து அவரது பொன்விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கியுள்ளார். அதில் ஆரம்பத்தில் எழுதிப் பழகிய கவிதைகளையும் பதிவு செய்திருந்தமை இராஜகாந்தனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது போலும்.

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 31 - வாரிசு
நிறைவுப் பகுதி

அண்ணையின் அற்புத தரைகீழ் மாளிகை தரிசனம் முடிந்து வந்து ஒரு வாரமாகிறது.

கல்யாணத்துக்கு இன்னும் எண்ணி மூன்று நாட்கள். சுபநாளைச் சதா நினைவூட்டும் களுபண்டா, எனது கண்களில் அடிக்கடி எழுந்து நின்று வினாவெழுப்பினார்.

வாழ்வின் பொன்னான நாள். சொர்க்கத்தில் எழுதிய கல்யாணம். அதற்கு இராணுவ முகாம் தளபதிகளுக்குக் கல்யாணப்பத்திரம் வைக்கும் சுபநாள். சுபவேளைக்கு ரண்டு மணிநேரந்தான் உண்டு. தேகம் புல்லரித்தது.
காலை எழுந்ததும் ராஜ மல்லிகைப் பூச் சேகரித்து கட்டிய அழகிய முத்து வண்ண மாலையின், கமகம சுகந்தம் என் குழப்பத்தை மௌனமாக நோக்கியது.

Saturday 23 May 2015

புதிய வருகை - சிறுகதை


உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கும் அசதியாக இருந்தது. ஹொஸ்பிற்றலுக்குப் போவதற்கு ஆயத்தமாகக் காரை வீட்டு முகப்பினிலே நிறுத்தியிருந்தான் அவன்.

"சாந்தினி வெளிக்கிடுவம் என்ன!"

சாந்தினி பயந்தபடியே படுக்கைக்கும் ரொயிலற்றுக்குமாக, தனது பென்னாம் பெரிய வயித்தையும் தூக்கிக் கொண்டு நடை பயின்று கொண்டிருந்தாள். தேவைப்படும் சாமான்களைக் காரினுள் அடுக்கிக் கொண்டிருந்த செல்வாவிற்கு, அவளைப் பார்க்கக் கவலையாக இருந்தது.  சாந்தினிக்கு இது முதற் பிரசவம்.

அடுத்த 'யுனிட்'டில் வசிக்கும் மாட்ரா கதவைத் தட்டினாள். நிலமையை விசாரித்தாள். சாந்தினியின் வயிற்றை மெதுவாகத் தடவி விட்டு சின்னக் குழந்தையைப் போலச் சிரித்தாள். அவளின் கனிவான பேச்சு சாந்தினிக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது. தாங்கள் 'ஹமில்டன்' போவதாகவும் டேவிட்டின் மகளின் வீட்டில் இரண்டொரு நாட்கள் தங்கிவிட்டு வருவதாகவும் கூறிச் சென்றாள். டேவிட்டும் அவனது மனைவி மாட்ராவும் எப்போதாவது இப்படிப் போய் தங்கிவிட்டு வருவார்கள். ஹமில்டன் ஆக்லாந்திலிருந்து மூன்று மணித்தியாலம் கார் ஓடும் தூரத்திலுள்ளது.

இவர்களின் வீடு பிரதான சாலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் சிறு பாதையில் இருக்கின்றது. ஒருபுறத்தே மூன்று யுனிட்டுகள் இருந்தன. அதில் முதலாவதில் இவர்களும், அடுத்ததில் டேவிட்டும், மற்றதில் அடிக்கடி மாறிச் செல்லும் மனிதர்களுமாக இருந்தார்கள்.
சிறு பாதையின் எதிர்ப்புறத்தில் இருந்த வீட்டிலிருந்து கிறேஷ் இவர்களின் வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தாள். அவளது கையில் இருந்த அன்றைய தினசரிப் பேப்பரான 'நியுசிலாண்ட் ஹெரால்ட்' இவர்களின் திசை நோக்கிப் படபடத்தது. ஏதாவது எமது நாடு சம்பந்தமான தகவல்கள் வந்தால் கொண்டு வந்து காட்டுவாள். அடிக்கடி வருவது நாட்டுப் பிரச்சினைதான். எழுபத்தெட்டு வயதைத் தாண்டிவிட்ட அவள்  இன்னமும் துடிப்புடனே காணப்படுகின்றாள். இவர்களுக்குக் கரைச்சல் குடுக்கக் கூடாது என நினைத்தாளோ தெரியவில்லை, மாட்ராவுடன்  கதைத்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டாள்.

Monday 18 May 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 30 - பாதாள மாளிகை

9 நெடுஞ்சாலையில் எமது வாகனத்தின் முன்னும் பின்னும் சுற்றுலா வாகனங்கள். ஆதியும் தெரியவில்லை, அந்தமும் தெரியவில்லை.

சிங்கள மக்களை கவர்ந்த முதலாவது காட்சி. கிளிநொச்சி. ராட்சத நீர்தாங்கி--வாட்டர் ராங்.

கிளிநொச்சி நகருக்கு குடிநீர் வழங்கியது. தமிழ் ஈழ இறுதி யுத்த வேளை. வன்னி நிலப்பரப்பில் முன்னேறும் இராணுவத்துக்குப் பயன்படாமல் செய்ய, மேலிடத்துக் கட்டளையின் படி நானும் எனது அணியினரும் குண்டுவைத்து நீர் தாங்ககியின் தாங்குதூண்களையும் தகர்த்துச் சரித்தோம்.

பிரமாண்ட ராட்சத ரூபம். தரையில் சரிந்து கிடந்து காட்சி தருகிறது. இராணுவம் அருங் காட்சிப் பொருளாய் பாதுகாத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அதனைச் சுற்றி கம்பி வேலி அருகில் சென்று பார்க்கச் செல்பவர்களுக்கு மாபிள்நடைபதை. இராணுவ வீரன் சீருடையில் நின்று வெங்கலக் குரலில் பேசுகிறான். தண்ணீர் தாங்கியின் வரலாற்றைச் சிங்களத்தில் விளக்குகிறான். சனம் முண்டியடித்து வாயைப் பிளந்து நின்று தலையை நீட்டி அவதானிக்கிறது. அவர்கள் புலன்கள் யுத்த கோரத்துள் புதைந்து மறைந்து நிற்கின்றன.

Saturday 16 May 2015

அது ஒரு கனாக் காலம் - கவிதை

சின்னராசா இராஜகாந்தன்


 

தென்னங் குரும்பையில் தேர்செய்து
தேமாப்பூவில் மாலை கட்டி
தேங்காய் ஓட்டில் பொங்கலிட்ட
பென்னம் பெரிய திருவிழாவில்
பூவரசங் குழல் நாதஸ்வரம்
புளியமரம் கோவில் மடம்
பூவும் புதிய பிஞ்சும்
தின்று தீர்த்த பின்பும்
என்றும் காத்திருப்போம்
செம்பழக் காலம் வரை.

Friday 15 May 2015

பகடை - சிறுகதை

கடைசியில் அன்னம்மாக்கிழவியின் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற பதில்தான் வந்தது.

ஒரு கிழமைக்கு முன்பு, கிளாலிக்கடலேரியில் - படகு கவிழ்ந்ததில் அன்னம்மா ஆச்சி உட்பட ஐந்துபேர் மரணமானார்கள்.

இருளிற்குள் தலையைச் சுவர்மீது முட்டி மோதி, கால்களை  பரப்பிச் சுய நினைவற்றுக் கிடந்தாள் பவானி.

உலகம் அழிந்தொழிந்து போனபின் ஏற்பட்டிருக்கும் மயான அமைதியக் குலைத்துக் கொண்டு - புதிதாகப் பிறந்துவிட்ட ஏவாளெனக் குழந்தை வீரிட்டு அலறியது. அந்த அழுகுரல் காட்டிற்குள் வழிதவறிப் போய்விட்ட ஒரு குழந்தையின் அழுகுரலென பவானியின் காதில் விழுந்தது. கால்கள் தானாகவே எழுந்து, இருளிற்குள் நடந்து, அச்சொட்டாகக் குழந்தை இருக்குமிடம் நோக்கியது. இங்கு இருளிற்குள் நடப்பதற்கு மனிதர்கள் எல்லாம் எப்போதோ பழகிக் கொண்டுவிட்டார்கள். குழந்தை தெப்பமாக நனைந்ததில் உடம்பு விறைத்துப் போயிருந்தது. முதன் முதலாக அன்னம்மா ஆச்சி இல்லாத வெறுமையை உணர்ந்தாள் பவானி.

Wednesday 13 May 2015

Transition - short story



            
                                                                                     In Tamil: K.S.Suthahar
                                                                                     In English: Kandiah Kumarasamy
                                                                                                           (Nallaikumaran)

                                           It is Melbourne.
                                           Trees on the roadsides have lost their live-green hue and looked withered in that cold evening. Shankar came back from work. He hurriedly went to the dining table, as he was very hungry. Bharathy served takeaway hot food, fried rice, brought from the Chinese restaurant. After eating two mouthfuls, he regained his lost vigour and started his useless dialogue with the usual arrogance.
“I will tell you one thing. Do not come to fight with me.”
“Why do you want to start a topic while eating?”- Bharathy asked him even though she is anxious to know what he intended to say.

உள்ளங்கையில் உலகம்



நிமிர்ந்து நில் - வானம்
உனக்குத்தான்.
சுழலுகின்ற உலகம் - உன் கைகளில்

Monday 11 May 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 29 - கரடி குதறிய போராளி

சூரியன் உச்சிக்கு வந்து விட்டது. இப்பொழுதுதான் கண் விழித்தேன்.

குட்டிப் போட்டிக்கோவில் நின்றுவீதியைப் பார்த்தேன். புதிதாக நட்ட கொன்கிறீட் மின்சார கம்பம். அதில் ஏறியிருந்த ஒருவன் என்னைத் திரும்பிப் பார்த்துத் தலை ஆட்டினான். எனது வீட்டுக்கு மின்சாரஇணைப்பு வழங்க வயர்கள் பொருத்திக் கொண்டிருந்தான்.

மாலைஐந்து மணி.
சுசீலா அக்கா, மணி அண்ணை வந்தார்கள். ஏதோ முக்கிய அலுவல் பேச வந்திருப்பதாய்ப் பட்டது.

களுபண்டா, தாய், சகோதரியுடன் சுற்றுலாச் சென்றமை மனதில் கசப்பை ஏற்படுத்தியிருந்தது. காட்டிக் கொள்ளாமல், மௌனமாய்ச் சோபாவில் அமர்ந்தார்கள். உள்மனதின் குறுகுறுப்புப் புரிந்தது. புரியாதது போல அன்பாய்ப் பேசினேன்.

Monday 4 May 2015

வன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 28 - நச்சுப் பாம்பாய் வருவேன்

போட்டிக்கோவில் நின்று எமது வளவுக்கும் பாடசாலைக்கும் இடையில் அமைந்த வீதியைப் பார்த்தேன். மனம் மகிழ்ச்சியால் பூரித்தது. சிவப்புக் கிறவல் வீதி மாயமாய் பறந்து மறைந்து விட்டது. ஆயிலடிக்கு இப்படி ஒரு இரட்டைப் பாதை கறுப்புக் காபட் வீதி வரும் என்று கற்பனையிலும் நான் எண்ணவில்லை.

'வணக்கம் அன்ரி. வீதியை ரசிக்கிறீர்களா?" கோமதி போட்டிக்கோ அருகாமையில் வந்தபடி விசாரித்தாள்.
ஓம். கற்பனைக்கும் எட்டாத அபிவிருத்தி."

சிந்துசா பேசினாள். 'அன்ரி, யுத்தம் வராதிருந்தால் காபட் வீதி இந்தக் காட்டுக்குள் எட்டிப் பார்த்திராது. துவேசம் புற்று வியாதியாய்ப் பிடித்த பெரும்பான்மை சிங்கள மக்கள் அரசு, இன்னும் பத்து நூற்றாண்டுகள் வந்துபோனாலும் காபட் லீதி போடாது. சீனாக்காரனுக்கு நன்றி சொல்ல வேண்டும்."
'சீனாக்காரன் வாழ்க!" பிள்ளைகள் ஏகோபித்த குரலில் வாழ்த்தினார்கள்.

பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் பதிவு வேலைகள் முடிந்ததும் லெப்ரினன் ஐராங்கனி என்னை விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

இருநூறு அடிகள் வரை நீளமான மண்டபம். இருபக்கங்களிலும் சாக்குக் கட்டில்கள். அவற்றில் புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலிப் போராளிகள்.

Sunday 3 May 2015

பாதுகை - சிறுகதை

'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்..." கோவிலில் பாட்டுக் கேட்கத் தொடங்கிவிட்டது. நேற்றுத்தான் ஒரு சோடி புதுச்செருப்பு வாங்கியிருந்தேன். நங்கூரம் படம் போட்டது. அதைப் போட்டுக்கொண்டு மடைக்குப் போய் ஒரு 'ஷோக்' காட்டவேணும். போனமுறை மடைக்கு வரேக்கை உமாசுதன் புதுச்செருப்புப் போட்டுக் கொண்டு வந்தவன். அவனை ஒருத்தரும் கண்டுகொள்ளேல்லை. மண்ணை உதறிக் கொட்டுமாப்போல, பத்துப் பதினைஞ்சுதரம் நிலத்தோடை செருப்பைத் தாளம் போட்டு, அடிச்சு அடிச்சுக் காட்டினவன். இந்த முறை நானும் போட்டுக் காட்ட வேணும்.

கோவிலிலை செருப்பைச் சும்மா கழட்டி வைக்கப்படாது. ஆராவது அடிச்சுக் கொண்டு போடுவான்கள். செருப்புக்கு காவல் இருக்கிறவரிட்டைக் காசைக் குடுத்து கவனமாக வைக்க வேணும். செருப்புக் கொஞ்சம் பெரிசாப் போச்சுதோ? எனக்கு ஆறாம் நம்பர்தான் சரிவரும் போல. பரவாயில்லை! ஆர் உதைக் கவனிக்கிறான்கள்.

Friday 1 May 2015

தொண்ணூற்றி மூன்று வயது இளைஞனின் சுறுசுறுப்பான இலக்கியப் பயணம்

சிசு.நாகேந்திரன்

ஆடி, ஆவணி மாதங்களில் மெல்பேர்ண்ணில் கடும் குளிராக இருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன்பிருக்கும். மாலை நேரம் 6 மணி. வெளியே கடும்குளிர், காற்று. படுக்கையில் 'சும்மா' சரிந்தவாறே குளிர் போர்வையைப் போர்த்திவிட்டு கைத்தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன். இணைப்புக் கிடைத்தது. அவரது குரலில் சற்றே களைப்புத் தென்பட்டது.

"என்ன கதைப்பதற்கு கஸ்டப்படுகின்றீர்கள் போல கிடக்கு? ஏதாவது சுகம் இல்லையா" என்று கேட்டேன்.

"இல்லைத் தம்பி... உதிலை நடை ஒண்டு போட்டு வாறன். கிட்டத்திலைதான். தெரிஞ்ச ஆக்கள் வீடு. அதுதான் களைக்குது. ஒரு மரத்துக்குக் கீழை நிக்கிறன்."

கங்காருப் பாய்ச்சல்கள் (-16)

புதுமை(புரட்சி)ப் புத்தகங்கள்

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்களை அந்தப் பெண் எழுத்தாளர் வெளியிட்டிருந்தார். சிறுவர் கதம்பம், சுடர், தமிழன் வேட்கை, கீர்த்தனை மாலை, சந்தகக்கவி என்ற புத்தகங்கள் அவை. அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியையும் கூட. மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயம்தான். ஆனால் ஒரு குறை.

புத்தகம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? உள்ளே சரக்கு இருக்குதோ இல்லையோ அதற்கு ஒரு வடிவம் வரையறை இருக்க வேண்டும். 'மணி' அடித்தால் ஓசை வரவேண்டும் அல்லவா?