Friday 3 May 2024

ஸ்பெசிமன் றைற்ரேர்ஸ் (Specimen Writers) - கங்காருப்பாய்ச்சல்கள் (45)

 
அவர் எத்தனையோ ஆயிரம் கட்டுரைகள் எழுதிவிட்டார். உண்மையில் சொல்லப்போனால் அவர் ஐந்தோ ஆறோ கட்டுரைகள்தான் எழுதியிருப்பார். பல்கலைக்கழகங்களில் ’ஸ்பெசிமன் – specimen’ – அதாவது ’மாதிரி’ – நாலைந்து உலாவும். அதைப் பார்த்து, அதே போல பாடத்திட்டங்களுக்கான coursework ஐ மாணவர்கள் செய்துவிடுவார்கள். ஸ்பெசிமன் இல்லாவிட்டால் அதோ கதிதான்.

இவரும் அப்படித்தான். தானே எழுதிவைத்த ஸ்பெசிமனை - வேண்டும்போது விரித்தோ சுருக்கியோ பட்டை தீட்டியோ எழுதிவிடுவார். இவரது எழுத்தை முதலில் படிப்பவர்களுக்கு அது ‘அச்சா’வாக இருக்கும். தொடர்ந்து படிப்பவர்களுக்கு ‘சூச்சா’வா இருக்கும். தலை கிறுகிறுக்கும். அந்த ‘மாதிரி’யில் கோடிட்ட இடங்களை நிரப்பி நேரத்திற்கு நேரம் எழுதிவிடுவார்.

அரைத்த மாவை திரும்ப அரைப்பதும், ஒரே தோசையை திரும்பத் திரும்ப வழம் மாத்தி வழம் மாத்திப் போட்டுக் கருக்கி வாசனை உண்டாக்குவதும் அழகல்ல.

 

Friday 26 April 2024

காதைத் திறந்து வையுங்கள், வாயைப் பொத்திக் கொள்ளுங்கள் - கங்காருப்பாய்ச்சல்கள் (44)

 
என்னுடைய நண்பர்களில் சிலர், ஒரு சிலரின் மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்கு முன்னரே உடனுக்குடன் அழித்துவிடுவதாகச் சொல்வார்கள். மேலும் அவர்களின் எந்தவொரு படைப்பையும் புத்தகத்தையும் தாங்கள் வாசிப்பதில்லை எனவும் சொன்னார்கள். அவர்களின் கொள்கைகள், செயற்பாடுகள், நடத்தைகள் இவற்றைவிட வேறென்ன அவர்களின் படைப்புகளில் இருக்கப் போகின்றது என்பது அவர் வாதம். இப்பொழுது நானும்.

ஒரு அமைப்பில் உள்ளவர்கள் முறையற்று நடந்து கொள்கின்றார்கள் என அவர்களை ஒருவர் நிராகரிப்பதும் - பின்னர் அவர்கள் விருதைத் தந்தவுடன் `யார் தந்தால் தான் என்ன, அது எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதுதான்என ஏற்றுக் கொள்வதும் எந்த வகையில் நியாயம்? அவர்கள் அவரின் வாயை மூடுவதற்குத்தான் இதைச் செய்கின்றார்கள் என்பதை விருதைப்பெறுபவரின் பேராசை பிடித்த மனம் நிராகரித்துவிடுகின்றதே!

எஸ்.பொ இலக்கியத்தோட்டத்தில் விருதைப் பெற்றுக்கொண்டு, பாதி வழியில் திரும்பும்போது அந்த அமைப்பைக் காறித் துப்பிவிட்டாரே!

மனித மனங்களைச் செழுமையாக்குவதற்கே இலக்கியம். சண்டை செய்து வியாக்கியானம் பேசுவதற்கு அல்ல.

தமிழ் வளர்க்கக் கடமைப்படாத எழுத்தாளர்களினதும் (30 வார்த்தைகள் தமிழில் எழுதினால் 300 வார்த்தைகள் ஆங்கிலம் கலக்கும்) –மனிதாபிமானமற்ற சுயநலப்போக்குடைய எழுத்தாளர்களினதும் படைப்புகளை – அது எத்தகைய உச்சம் கொண்ட போதிலும் நான் படிப்பதில்லை.

அவை என்னில் எந்தவித மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தப் போவதில்லை என்பதில் நான் திடமாக இருக்கின்றேன்.

எழுத்தாளர்களிடமிருந்து நியாயமான படைப்புகள் வெளிவரல் வேண்டும். அவர்களின் நோக்கம் எது என்று தெரியாமலே, சொல்லி வைத்த சிலரால் பாராட்டப்படுகின்றார்கள். பின்னர் தாமே பணம் கொடுத்து அவற்றை பிற மொழியிலும் மொழிபெயர்க்கின்றார்கள்.